இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Wednesday, October 20, 2010

காலம் பொன் போன்றது... (2010 2010)


பத்து ஆண்டுகளின் அருமை தெரிய வேண்டுமா?
புதிதாக விவாகரத்து ஆன தம்பதியிடம் கேளுங்கள்.

ஒரு ஆண்டின் அருமை தெரிய வேண்டுமா?
இறுதித் தேர்வில் தோல்வியடைந்த மாணவனைக் கேளுங்கள்.

ஒரு மாதத்தின் அருமை தெரிய வேண்டுமா?
குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தையின் தாயைக் கேளுங்கள்.

ஒரு வாரத்தின் அருமை தெரிய வேண்டுமா?
வாராந்திர பத்திரிகையின் ஆசிரியரைக் கேளுங்கள்.

ஒரு மணியின் அருமை தெரிய வேண்டுமா?
காத்திருக்கும் காதலர்களைக் கேளுங்கள்.

ஒரு நிமிடத்தின் அருமை தெரிய வேண்டுமா?
விமானம், ரயில் அல்லது பஸ்ஸை தவற விட்டவர்களைக் கேளுங்கள்.

ஒரு நொடியின் அருமை தெரிய வேண்டுமா?
விபத்தில் உயிர் தப்பியவரைக் கேளுங்கள்.

ஒரு மில்லி-நொடியின் அருமை தெரிய வேண்டுமா?
ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரைக் கேளுங்கள்.

காலம் பொன்னானது.
ஒவ்வொரு நொடியையும் பொக்கிஷமாகப் போற்றுங்கள்.
வெற்றிச் சிகரத்தில் கொடி நாட்டலாம்.

Sunday, October 17, 2010

சண்டே ஸ்பெஷல் -கிட்னி பிரை (ஸ்மால் சிக்கன்) - Kidney Fry (17/10/2010)



தேவையான பொருட்கள்:-

ஆட்டு கிட்னி - கால் கிலோ
உப்பு தூள் - அரை தேக்கரண்டி (தேவைக்கு)
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
காஷ்மீரி சில்லி பொடி - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - முக்கால் தேக்கரண்டி
கொத்து மல்லி தழை - சிறிது
புதினா - முன்று இதழ்
பச்ச மிளகாய் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
பட்டை - சிறிய துண்டு (கால் இன்ச் அளவு)
கரம் மசாலா தூள் - ஒரு பின்ச்
தக்காளி ஒன்று - சிறியது
எண்ணை - இரண்டு தேக்கரண்டி
நெய் - கால் தேக்கரண்டி



செய்முறை :-

1. முதலில் கிட்னியை நடுவில் இருக்கும் கொழுப்பை மட்டும் அகற்றி விட்டு இரு முறை கழுவி மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் ஊறவைக்கவும்.

2. பிறகு மறுபடி இருமுறை கழுவி தண்ணீரை வடிய விடவும்.கிட்னியில் உப்பு , இஞ்சி பூண்டு பேஸ்ட், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும், தக்காளியை நான்கு துண்டாக அரிந்து போடவும்.

3. கலக்கியதை ஐந்து நிமிடம் ஊறவைத்து குக்கரில் தண்ணீர் சேர்க்க வேண்டாம் முன்று விசி விட்டு இரக்கவும்.

4. இப்போது அதில் நிறைய தண்ணீர் நிற்கும் அதை வற்ற விடவும்.

5. தனியாக ஒரு வானலியில் ஒரு தேக்கரண்டி எண்ணை ஊற்றி பட்டை,வெங்காயம் மீடியமாக அரிந்து சேர்த்து தாளித்து வற்றிய கிட்னியை சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி பச்சமிளகாய் பொடியாக அரிந்து சேர்த்து கொத்துமல்லி, புதினா, நெய்,சேர்த்து கரம் மசாலா, தூவி கிளறி இரக்கவும்.

6. சுவையான கிட்னி பிரை ரெடி.



குறிப்பு:-

இதை சரியாக கழுவ வில்லை என்றால் செய்யும் போது ஸ்மெல் வரும், ரொம்ப நேரம் வேக விட்டால் ரொம்ப கல்லு மாதிரி ஆகிடும்.
இதை குக்காரில் வேக வைத்து செய்வதால் குழந்தைகளுக்கு கடித்து சாப்பிட ஈசியாக இருக்கும்.
குழந்தைகளுக்கு இதை ஸ்மால் சிக்கன் என்று சொல்லி கொடுங்கள்.காஷ்மீரி சில்லி பொடி என்பது நல்ல கலராக இருக்கும் காரம் அவ்வள்வாக இருக்காது.
அது கிடைக்க வில்லை என்றால் சாத மிளகாய் தூளே போதுமானது.இதே போல் மிளகு சேர்த்தும் செய்யலாம்.
குழந்தைகளுக்கு,பிள்ளை பெற்றவர்களுக்கு நெயிலேயே கூட செய்து கொடுக்கலாம்.

Saturday, October 16, 2010

சரஸ்வதி பூசை (ஆயுத பூசை) (16/10/2010)

சரஸ்வதி பூசை என்பது ஒரு அர்த்தமற்ற பூசை. கல்வியையும் தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி, அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதைப் பூசை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி, நம்மைப் பார்ப்பனர்கள் ஏமாற்றி, கல்வி கற்கச் சொந்த முயற்சி செய்து கொள்ளாமல், சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்தச் சாமி பூசையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே, அவர்கள் படித்துப்பெரிய படிப்பாளியாகிக்கொண்டு, நம்மைப் படிப்பு வரமுடியாத "மக்குகள்" என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்.

முதலாவது, சரஸ்வதி எனும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால், அது பார்ப்பனர்களின் புராணக் கதைகளின்படியே மிக்க ஆபாசமானதாகும். அதாவது, சரஸ்வதி என்கிற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்திலிருந்து உண்டாக்கப்பட்ட பிறகு, அவள் அழகைக் கண்டு, அந்தப் பிரம்மனாலேயே மோகிக்கப் பட்டு அவளைப் புணர அழைக்கையில், அவள் பிரம்மனை தகப்பன் என்று கருதி, அதற்கு உடன்படாமல் பெண் மான் உருவம் எடுத்து ஓடவும், உடனே பிரம்மன் தானும் ஒரு ஆண் மான் உருவ மெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும் சிவன் வேட உருவ மெடுத்து அவளைப்பின் தொடர்ந்து ஓடவும், சிவன் வேட உருவமெடுத்து ஆண்மானைக் கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் பிரம்மனை உயிர்ப்பிக்கச் செய்து, பிரம்மனுக்கு மனைவியாக மீண்டும் சம்மதித்தாக சரஸ்வதி உற்பவக்கதை கூறுகிறது.

இரண்டாவது,

ஒரு விதத்தில் சரஸ்வதி பிரம்மாவுக்குப் பேத்தி என்று சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் ஊர்வசியின் மீது ஏற்பட்ட ஆசையின் போது வெளிப்பட்ட இந்திரியத்தை ஒருகுடத்தில் விட்டு வைக்க, அக்குடத்தில் இருந்து அகத்தியன் வெளியாகி அந்த அகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று சொல்லப்படுகிறது. அதனால் பிரம்மாவுக்கு சரஸ்வதி, மகன் வயிற்றுப் பேத்தியாகிறாள். எனவே சரஸ்வதி பிறப்பும், வளர்ப்பும் மேற்படி நடவடிக்கையும் பார்ப்பனப் புனைவுப்படி மிகவும் ஆபாசமும் ஒழுக்க ஈனமுமானதாகும்.

நிற்க,

இந்த யோக்கியதையுடைய அம்மாளை எதற்காக மக்கள் பூசை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயம். அதாவது, சரஸ்வதி வித்தைக்கு அதிபதியான தெய்வம் ஆனதால், வித்தையின் பயன் தொழில் என்றும், தொழிலுக்கு ஆதாரமானவை ஆயுதங்கள் என்றும் கருதிக்கொண்டு, சரஸ்வதிபூசை ஆயுத பூசை என்று ஒவ்வொரு நாளைக் குறித்துக் கொண்டு, அந்த நாளை விடுமுறையாக்கி, புத்தகங்களையும் ஆயுதங்களையும் வைத்துப் பூசை செய்கின்றார்கள்.

இந்தப் பூசையில் அரசன் தனது ஆயுதங்களையும் வியாபாரி தனது கணக்குப் புத்தகங்களையும் , தராசு, படிக்கல், அளவு மரக்கால், படி, உழக்கு, பெட்டி முதலியவற்றையும்; தொழிலாளிகள் தங்கள் தொழிலுக்குரிய ஆயுதங்களையும், இயந்திரக்காரர்கள் தங்கள் இயந்திரங்களையும், மாணவர்கள் தங்கள் புத்தகங்களையும், குழந்தைகள் பொம்மைகளையும், தாசிகள் தங்கள் ரவிக்கைகளையும், சேலைகளையும் நகைகளையும், வாத்தியக்காரர்கள் தங்கள் வாத்தியங்களையும் இதுபோல் ஒவ்வொருவரும் தங்கள் இலட்சியத்திற்கு வைத்திருக்கும் அவரவர் ஆயுதங்களையும் வைத்துப் பூசை செய்கிறார் கள். இதனால் அந்தத் தினத்தில் தொழில்கள் நின்று அதனால் வரும் படிகளும் போய் பூசை, ஓய்வு முதலிய ஆடம்பரங்களுக்காகத் தங்கள் கையில் இருக்கும் பணத்தில் ஒரு பகுதியைச் செலவழித்து, போதா விட்டால் கொஞ்சம் கடன் வாங்கியும் செலவழிப்பதைவிட இதனால் யாதொரு நன்மையும ஏற்படுவதாகச் சொல்வதற்கு இடமே இல்லை.

சரஸ்வதி பூசை செய்யும் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்குப் பயந்து பொய்நிறை நிறுக்காமலோ குறையளவு அளக்காமலோ, தப்புக்கணக்கு எழுதாமலோ இருக்கிறார்கள் என்று சொல்லமுடியாது. அதுபோலவே கைத்தொழிலாளர்கள் தங்கள் ஆயுதத்தைக் கழுவிச் சந்தனம், குங்குமப் பொட்டு வைத்து விழுந்து கும்பிடுவார்களே தவிர அவர்களுள் எவனாவது நாணயமானவனாய் நடக்கின்றான் என்றோ, தொழில்கள் தாராளமாய் கிடைக்கின்றது என்றோ சொல்லுவதற்கு இடமில்லாமல் இருக்கின்றார்கள் . அதுபோலவே புத்தகங்களையும், கூளக்குப்பைகளையும் அள்ளி அவற்றிக்குப் பொட்டுவைத்துப் பூசை செய்கின்றார்களே அல்லாமல், காலோ கையோ பட்டு விட்டால், தொட்டுக் கண்ணில் ஒத்திக்கொள்கின் றார்களே அல்லாமல், நமது நாட்டில் படித்த மக்கள் 100-க்கு 5- பேர்கள் என்று தான் உள்ளார்கள்.

இவ்வளவு ஆயுத பூசை - சரஸ்வதி பூசை செய்தும் நமது வியாபாரிகள் நஷ்டமடைந்தும், தொழிலாளர்கள் பிழைக்கத் தொழில்கள் இன்றியும் அவதிப் பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். சரஸ்வதியின் சாதியைச் சேர்ந்த பெண்கள் 1,000-த்துக்கு 9- பேர்கள் படித்து உள்ளார்கள் இதன் காரணம் என்ன? நாம் செய்யும் பூசைகளை சரஸ்வதி அங்கீகரிக்கவில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விஷயத்திற்கும் ஒன்றும் சம்பந்தம் இல்லையா? அல்லது சரஸ்வதி என்கிற தெய்வமே ஒரு பொய்க்கற்பனையா? என்பவை யாகிய இம்மூன்றில் ஒரு காரணமாகத்தான் இருக்க வேண்டும்.

இவையாவும் சுத்த முட்டாள்தனமான கொள்கைகள் என்பது தான் எனது அபிப்பிராயம். அயல்நாட்டானைப் பார்த்தால் அவனுக்கு சரஸ்வதி என்ற பேச்சோ கல்வித்தெய்வம் என்ற எண்ணமோ சுத்தமாய் கிடையாது. அன்றியும், நாம் காகிதத்தையும் எழுத்தையும் சரஸ்வதியாய்க் கருதிக்கொண்டும், தொட்டுக் கண்ணில் ஒத்திக்கொண்டும் நமக்குக் கல்வி இல்லை. ஆனால் வெள்ளைக் காரன் மலங்கழித்தால் சரஸ்வதியைக் கொண்டே (காகிதத்தை) மலம் துடைத்தும் வருகிறான். ஆனால் 100-க்கு 60 பெண்கள் அவர்களில் படித்து இருக்கிறார்கள் உண்மையிலேயே சரஸ்வதி என்ற தெய்வம் ஒன்று இருக்கும் என்றால், பூசை செய்பவர்களைத் தற்குறியாகவும் மலம் துடைப்பவர்களை அபார அறிவாளிகளாகவும் கல்விமான்களாகவும் செய்யுமா என்று தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.

உண்மையில் யுத்த ஆயுதம், கைத்தொழில் ஆயுதம், வியாபார ஆயுதம் ஆகியவைகள் சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாய் இருக்குமானால், அதைப் பூசை செய்யும் இந்த நாடு அடிமைப்பட்டும் தொழிலற்றும், வியாபாரமற்றும் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கவும், சரஸ்வதியைக் கனவிலும் கருதாது, சரஸ்வதி பூசை செய்கின்றவர் களைப் பார்த்து "முட்டாள்கள், அறிவிலிகள் , காட்டுமிராண்டிகள்" என்று சொல்லிக்கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும், வியாபாரிகள் அரசாட்சியுடனும், தொழிலாளர் ஆதிக்கத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப்பாருங்கள். இந்தப் பூசையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகிறது என்று பாருங்கள்!

இராசாக்கள் கொலு இருப்பது, பொம்மைகள் கொலு இருப்பது, சாமிகள் கொலு இருப்பது , இதற்காக ஜனங்கள் பணம் செலவு செய்வது, அறிவுச் செலவு செய்வது, லட்ச ரூபாய்க்குப் பொம்மைகள், சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கடலை, பொரி, சுண்டல், வடை, மேளவாத்தியம் வாழைக்கம்பம், பார்ப்பனர்களுக்குத் தட்சணை, சமாராதனை, ஊர்விட்டு ஊர் போக ரயில் சார்ஜ் ஆகிய எவ்வளவு செலவாகின்றன என்பதை எண்ணிப் பாருங்கள். இவைகள் எல்லாம் யார் வீட்டுப் பணம்? தேசத்தின் செல்வமல்லவா? என்று கேட்கிறேன். ஒரு வருஷத்தில் இந்தப் பூசையில், இந்த நாட்டில் செலவாகும் பணமும், நேரமும் கோடி ரூபாய் பெறுமானது என்ற கணக்குப்பார்த்தால், மற்றப் பண்டிகை, உற்சவம் புண்ணிய தினம், அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கிவிடும். இதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணர்களும் கணக்குப் பார்ப்பதே இல்லை

- தோழர் பெரியார்.
["இந்துமதப் பண்டிகைகள்" நூலில் இருந்து...]

Saturday, October 9, 2010

சாப்பிட்டபின் செய்யக்கூடாதவைகள்! (09/10/2010)


1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால் - அவருக்கு அப்பழக்கம் உண்டு என்றாலும்கூட, அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதல் ஆகும்.
10, சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.

2. அதேபால், சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம், உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது. எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

3. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். (இது எவ்வளவு பேருக்குச் சாத்தியமோ தெரியாது) ஏனெனில் தேத்தூள் தழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.

4. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள் (Don’t Loosen Your Belt). ஏனெனில், அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.

5. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில், குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது! வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்!

6. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் - ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய் (டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல்லுவார்கள், இது ஒரு தவறான கருத்து.

நடந்தால், செரிமான உறுப்புகளுக்குப் போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே, இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது!

7. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணிநேரம் கழித்தே உறங்கச் செல்லவேண்டும்.மருத்துவத் துறையில் "நவீன மூட நம்பிக்கைகள்" பலவும் இதுபோல உண்டு.எனவே, மற்றவர்களுக்கும் இதனை எடுத்துக் கூறி, பயன்படும் "தொண்டறம்" புரிக!

இது எனக்கு மெயிலில் வந்தது அனைவரும் பயன்பெற தந்துள்ளேன். படித்து அதன்படி செயல்படுங்கள்,உயிர் இருக்கும்வரை உடல் ஆரோக்கியம் முக்கியமே !!!