இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Thursday, January 20, 2011

நாட்டு கோழி பிசினெஸ் (2001 2011)

5 ஆயிரம் முதலீட்டில் சுகுணா கோழி பண்ணை தொடங்கிய சவுந்திரராஜன் இன்றைக்கு 2000 கோடி மதிப்புள்ள சுகுணா பவுல்ற்றியின் முதலாளி

மிழக சட்டசபை கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில் "நாட்டுக்கோழிகளின் இனம் அழிந்துவருகிறது" ஏன்? என்ற கேள்வியை அமைச்சரிடத்திலே எழுப்பப்பட்டது. அந்த கோழிகளை அரசியல்வாதிகள் நிறைய சாப்பிடுவதால் அழிந்து வருவதாக கூசாமல் பதிலும் சொல்லப்பட்டது. இது பத்திரிகைகளிலும் வந்தது. இதனையடுத்து இந்த பதிவை இங்கு இடுகிறேன்.

என்னதான் விளைந்தாலும் விளைச்சலுக்கு பலன் இல்லை. எல்லாம் இடைத்தரகர்கள் பிடுங்கி கொண்டு போய் விடுகிறார்கள். "காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்' என்று சும்மாவா பாடினார்கள் பழைய படத்தில்! பசுமைப்புரட்சி என்ற பெயரில் நிலத்தில் கடுமையான ரசாயனங்களை கொட்டி மண்ணை மரணத்திற்கு கொண்டு போய்விட்டார்கள். மண்ணில் இருந்து கொண்டு கண்ணுக்கு தெரியாமல் மண்ணை உழுது கொண்டிருந்த பாக்டீரியாக்கள் முதல் உழவனின் நண்பனான மண்புழுக்கள் வரை அனைத்தும் மடிந்து போய் மண் மலடியாக மாறி விட்டது.

இந்த நிலையில் ஒரளவுக்கு மேல் மண்ணிலிருந்து பலனை எதிர்பார்க்கவும் முடியவில்லை. இதனால் இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்களும், அது சார்ந்த விவசாயமும் நாளுக்கு நாள் நம்பிக்கையை இழந்து வருகின்றன. விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் ஏதாவது நடக்கிறதா என்பதை பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் எதுவும் புலப்படவில்லை.

ஆக..இப்படி இருக்கும் நிலையில் விவசாயிகளுக்கு கையில் பணம் புரள ஏதாவது செய்தாக வேண்டும். நகரங்களில் ஐடி கம்பெனிகளில் இரவும் பகலும் கண்விழித்து சம்பாதிக்கும் இளைஞர்கள் உழைத்து பணத்தை வைத்திருக்கிறார்கள். இவர்களை தவிர பிசினஸ் பண்ணும் நபர்களிடமும் பணம் புழங்குகிறது. இது தவிர அரசியல் வாதிகளிடமும், லஞ்சம் வாங்கி கொழுக்கும் அரசு ஊழியர்களிடமும் பணம் புழங்குகிறது. அதாவது சமூகத்தின் வாங்கும் சக்தி அதிகம் உடைய தரப்பினர் இவர்கள் தான்.

இவர்களிடம் எதையாவது விற்க முடிந்தால் அதை விற்பவரின் பாக்கெட்டுக்கு பணம் வந்து நிரம்பும்.மேற்குறிப்பிட்ட இந்த தரப்பினர் அனைவரும் சிக்கனம் பார்க்காமல் செலவழிப்பது சாப்பாட்டுக்குத் தான். சரவணபவனும், திண்டுக்கல் வேலு பிரியாணியும்,ஆரிய பவனும் இவர்களால் தான் அதிகம் நிரம்பி வழிகிறது. சத்து இருக்கிறது என்றால் எதையும் வாங்கி சாப்பிட இவர்கள் முன்வருவார்கள். இவர்களுக்கு எதை விற்பது தான் கேள்வி?
'நாட்டுக் கோழி' என்றாலே முருங்கைக்காய் போல் அந்த விடயத்துக்கு பலத்தை சேர்ப்பது என்று ஒரு எண்ணம் இருக்கிறது. இது ஓரளவு உண்மையும் கூடத்தான். ஆனால் நாட்டுக் கோழியின் விலை இன்றைக்கு ஒரு கிலோ 250 ரூபாய். காரணம், நாட்டுக்கோழி அவ்வளவாக கிடைப்பதில்லை. இதனால் இதன் இறைச்சியும் விலை அதிகமாக இருக்கிறது.

நாட்டுக் கோழி ஏன் டிமாண்ட் ஆக இருக்கிறது? நாட்டுக் கோழிகளை யாரும் "பிராய்லர்" கோழிகள் போல் லட்சக்கணக்கில் பண்ணை முறையில் வளர்ப்பதில்லை. கிராமங்களில் பெண்கள் இவற்றை புழக்கடையில் தான் வளர்க்கிறார்கள். அதனால் இந்த கோழிகள் பெருமளவில் கிடைப்பதில்லை. ஆனால் பிராய்லர் கோழிகளை இன்குபேட்டர் முறையில் பொரிக்க வைத்து எடுப்பதால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகளை பெற முடிகிறது. அவற்றை வளர்த்து கறிக்கோழிகளாக மாற்ற முடிகிறது.

இந்த பிராய்லர் கோழிகள் செயற்கையாகவே பிறந்து ஊக்கமருந்துகளால் உப்பிய பலூன் போல பெருத்து 47 நாட்களில் 2 கிலோவை தாண்டி விடுகிறது. இந்த கோழிகளின் நோய் எதிர்ப்பு சக்திக்காக செலுத்தப்படும் மருந்துகள் மனித உடலில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது பற்றி இன்னும் சரியான விளக்கம் இல்லை.

இதையெல்லாம் கணக்கில் கொண்டால் நாட்டுக்கோழிகள் பலசாலிகள் தான். இவற்றின் இறைச்சியும் குழம்பும் ருசியாக இருக்கும். அதனால் அரசியல்வாதிகள் இவற்றை ஆயிரக்கணக்கில் கபலீகரம் செய்வதாக பேசப்படுகிறது. இது இருக்கட்டும். இந்த கோழிகளை சாப்பிட சாமானியர்களுக்கும் கசக்குமா என்ன? ஆனால் கிடைப்பது இல்லை. கிடைத்தாலும் விலை அதிகம்.

ஆக..இந்த நிலையில் நாட்டுக்கோழிகளை அதிக அளவில் உற்பத்தில் செய்தால் ஏராளமாக நாட்டுக் கோழிகள் விற்பனை ஆகும். நாட்டுக் கோழி பண்ணை வைப்பவருக்கு இதனால் லாபம் கொட்டும்.
இதனை கணக்கில் கொண்டு "தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்' கிராமப்புற பெண்களுக்கும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும் நாட்டுக் கோழி வளர்ப்பது பற்றிய 3 மாத கால தொலை தூர படிப்பை வழங்க உள்ளது. தபால் வழியில் கற்பிக்கப்படவுள்ள இந்த பாடத்திட்டத்தில் கோழியினங்கள், தீவனங்கள்,நோய் கண்டறியும் முறை உள்பட எளிதாக நாட்டுக் கோழிகளை வளர்ப்பது பற்றி சொல்லித் தர போகிறார்கள்.

இந்த பாடத்தை படித்து விட்டால், கிராமப்புறத்தில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் சிறிய அளவில் பண்ணையை தொடங்கி நடத்தலாம். பிறகு வெற்றிகரமாக பெரிய பண்ணைகளை தொடங்கலாம். இந்த நாட்டுக் கோழி வளர்ப்பு தபால் வழி படிப்பில் சேர 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். தமிழில் எழுதப்படிக்க ெத்ரிந்திருக்க வேண்டும். இவ்வளவு தான் தகுதி.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தேசிய வங்கி ஒன்றில் 220 ரூபாய்க்கு கல்வி இயக்குநர், தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழகம், மாதவரம், சென்னை. என்ற பெயருக்கு டிமாண்ட் டிராப்ட் எடுத்து கூடவே ஒரு கடிதத்தில் தங்கள் பெயர்,முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை எழுதி இதே முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அவர்கள் பாடத்திட்டங்களை அனுப்புவார்கள். படித்து பாஸாகலாம்.
இது பற்றி மேலும் விவரங்கள் அறிய 044-2555 4375, 2555 1586, 2555 1587 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Tuesday, January 18, 2011

அடுத்தவர் பாராட்டு அவசியமா? (1801 2011)

பேரும் புகழும் வேண்டி மனிதர்கள் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. 'அரைப்படி அரிசியில் அன்னனம், விடியும் வரையில் மேளதாளம்' என்றொரு பழமொழி உண்டு. குறைவாகச் செய்தாலும், பலரும் அதைப் பெரிதாக நினைத்துப் பாராட்ட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படிப் பாராட்டத் தவறுபவர்கள் வயிற்றெரிச்சல் பேர்வழிகள் என்ற வகைப்படுத்தப்படுவார்கள். இன்று அரசியல், ஆன்மீகம், கலை என்று எல்லா துறைகளிலும் இந்தப் புகழாசை மலிந்திருக்கிறதைப் பார்க்கிறோம். ஆனால் புகழ் பற்றிய எண்ணமே இல்லாமல் பெரும் சாதனைகள் செய்த ஓரிருவர் அல்ல, ஒரு கூட்டமே ஒரு காலத்தில் நம் நாட்டில் இருந்திருக்கிறது.

சில வருடங்களுக்கு முன் அஜந்தா, எல்லோரா சென்றிருந்தேன். அஜந்தாவில் பிரமிக்க வைக்கும் ஓவியங்கள் ஏராளமாக இருந்தன. ஒவ்வொரு ஓவியமும் கலை நுணுக்கத்துடன் வரையப்பட்டிருந்தது. ஒவ்வொரு ஓவியத்தை வரையவும் பல வாரங்கள் தேவைப்பட்டிருக்கும். அந்தக்காலம், இந்தக் காலம் போல வண்ணங்கள் ரெடிமேடாகக் கிடைக்கும் காலமல்ல. ஒவ்வொரு வண்ணத்தையும் இயற்கை முறையில் கஷ்டப்பட்டு தயாரித்து வரைந்திருக்கிறார்கள். ஆனால் எந்த ஓவியத்திலும் வரைந்தவரின் பெயர் இல்லை. (அதற்கு கீழே இந்தக் கால ரசிகர்கள் தங்கள் பெயர்களை எழுதிப் புளங்காகிதம் அடைந்திருக்கிறார்கள் என்பது வேறு விஷயம். அதனால் இப்போது அதன் அருகே பார்வையாளர்களை விடுவதில்லை. சில அடிகள் தள்ளியே நின்று பார்க்க வேண்டி இருக்கிறது).

எல்லோராவிலும் கண்ணையும் கருத்தையும் கவரும் ஏராளமான சிற்பங்கள் இருந்தன. மலையைக் குடைந்து செதுக்கிய சிற்பங்கள் பல. எல்லாம் மிக நுணுக்கமான நிகரில்லா வேலைப்பாடுகள். அதிலும் ஒன்றில் கூட செதுக்கியவர் பேரில்லை.

நம் உபநிடதங்களை மிஞ்சக் கூடிய அறிவுப் பொக்கிஷங்கள் வேறு ஏதாவது இருக்கிறதா என்பது சந்தேகமே. அவற்றில் கூட எழுதிய ஆட்கள் பெயர் இல்லை.

சரித்திரம் நம்மைப் பற்றிப் பேச வேண்டும் என்ற ஆர்வம் அந்த ஓவியர்களிடமோ, சிற்பிகளிடமோ, ரிஷிக்களிடமோ இருந்தது போலத் தெரியவில்லை. ஆத்மதிருப்தி ஒன்றே அவர்கள் குறிக்கோளாகவும், பெற்ற பலனாகவும் இருந்திருக்கிறது.

இன்றோ பெருமைக்குரிய செயலுக்காகப் பாராட்டு என்ற நிலை போய் பாராட்டை எதிர்பார்த்து செயல் என்றாகி விட்டது. இதில் பெரிய குறை என்ன என்றால் இது போன்ற செயலின் தன்மை பாராட்டைப் பொறுத்தே அமையும். பாராட்டு இல்லா விட்டால் செயலும் இல்லை என்ற நிலையும் வந்து விடும். ஒவ்வொன்றையும் மற்றவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று யோசித்து மற்றவர்களைத் திருப்திப்படுத்த முனைந்தால் நம் செயல்களின் மூலம் ஆத்ம திருப்தியைக் காணத் தவறி விடுவோம்.

பாராட்டைப் பொறுத்தே செயல்புரிவது என்று சரித்திரம் படைத்த விஞ்ஞானிகள் நினைத்திருந்தால் இன்று நாம் எந்தக் கண்டுபிடிப்புகளின் பயன்களையும் அனுபவித்துக் கொண்டு இருக்க முடியாது. காரணம் எல்லாக் கண்டுபிடிப்புகளுக்கும் ஆரம்ப கட்டங்களில் பாராட்டை விட கசப்பான விமரிசனங்களும், ஏளனமும் தான் பரிசாகக் கிடைத்திருக்கின்றன. பல உண்மைகள் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட போது கடும் எதிர்ப்பும், பைத்தியக்காரப் பட்டமும் தான் கிடைத்திருக்கின்றன. விமரிசனங்களின் உஷ்ணத்தில் பின் வாங்கியிருந்தால் எந்த சாதனைகளுமே உலகில் அரங்கேறி இருக்க முடியாது. இவ்வளவு தூரம் உலகம் முன்னேறி இருக்க முடியாது.

எல்லாத் துறைகளிலும் முத்திரை படைத்தவர்களும், ஒட்டு மொத்த சமுதாய முன்னேற்றத்திற்குக் காரணமாய் இருந்தவர்களும் பாராட்டை விட தங்கள் ஆத்ம திருப்தியையே முக்கியமாக நினைத்தார்கள். தாங்கள் சரியென்று இதயத்தின் ஆழத்திலிருந்து நம்பியதைச் செய்தார்களே ஒழிய பாராட்டுகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள முயற்சிக்கவில்லை.

எனவே அடுத்தவர் பாராட்டுக்கு அதிக முக்கியத்துவத்தை எப்போதும் கொடுத்து விடாதீர்கள். அடுத்தவர் பாராட்டுக்கள் உங்கள் செயலின் தன்மையைத் தீர்மானிக்க விட்டு விடாதீர்கள். தங்கள் நோக்கம் உன்னதமாக இருக்கட்டும். செயல் தங்கள் முழுத் திறமையின் வெளிப்பாடாக இருக்கட்டும். இரண்டும் இருந்தால் அந்தச் செயலைச் செய்து முடிக்கையில் கண்டிப்பாக மனநிறைவைக் காண்பீர்கள். அதைவிடப் பெரிய பாராட்டு அடுத்தவரிடமிருந்து உங்களுக்குத் தேவையில்லை.

Friday, January 14, 2011

தமிழ்ப் புத்தாண்டு!! பிரச்சினைக்கு முடிவு!!(1401 2011)


இப்போது வழக்கத்தில் உள்ள ஆண்டுக் கணக்கு முறையைக் கவனத்தில் எடுத்துக் கொண்டால் அது பற்சக்கர முறையில் உள்ளதைக் கவனிக்கலாம். அறுபது ஆண்டுகள், பற்சக்கர முறையில் திரும்பித் திரும்பி வருவதை நாம் காண்கின்றோம். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் பரபவ முதல் அட்சய என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன.

இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லை!

இந்த அறுபது ஆண்டுப் பற்சக்கர முறை குறித்து முதலில் கவனிப்போம். இந்த முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறிஸ்துவுக்கு பின் 78ம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுவார்கள். கனிஷ்கன் என்ற அரசனாலும் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுவோரும் உண்டு. பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாக பரப்பப்பட்டு நிலை நிறுத்தப்பட்டுள்ளது. எந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிறுத்தப்படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், கலைகள் போன்றவை அந்த நாட்டினரின் பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது இயல்பு. அந்த வகையில் இந்தச் சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல நடை முறைப் பழக்கத்திற்கு வந்து விட்டது. அறுபது ஆண்டு பற்சக்கர முறை காரணமாக ஆரியர்களிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் சஷ்டி பூர்த்தி என்ற அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழமையும் இருக்கின்றது.

மேலும் இந்த அறுபது ஆண்டு முறையைப் புகுத்திய ஆரியத்தின் விளக்கமும் மிகுந்த ஆபாசம் நிறைந்த பொருள் கொண்டதாகும். அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.

“ஒருமுறை நாரதமுனிவர், கிருஷ்ணமூர்த்தியை ‘நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு கன்னிகையாவது தரலாகாதா?’ என்று கேட்டார். அதற்குக் கண்ணன், ‘நான் இல்லாத பெண்ணை வரிக்க’ என்றான். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதினாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கண்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கண்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு அவரை நோக்கி ‘நான் தேவரீரிடம் பெண்ணாக இருந்து ரமிக்க எண்ணம் கொண்டேன்’ என்றார். கண்ணன் நாரதரை யமுனையில் ஸ்நானம் செய்ய ஏவ, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். இவருடன் கண்ணன் அறுபது வருடம் கூடி, அறுபது குமாரர்களைப் பெற்றார். அவர்கள் ‘பிரபவ முதல் அட்சய’ இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாகும் பதம் பெற்றார்கள்.”

(அனைவரும் ஆண்களே, பெண்கள் எவரும் இல்லை)



தமிழகத்தில் வானியலில் வல்ல அறிஞர்களை ‘அறிவர், கணி, கணியன்’ என அழைத்தார்கள். அரசனுடைய அவையில் பெருங்கணிகள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. மூவகைக் காலமும் நெறியினாற்றும் ‘அறிவர்கள்’ குறித்துத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார்.

தமிழர்கள் காலத்தைக் கணித்ததைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தார்கள். ஒரு நாளைக் கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பகுத்து வைத்தார்கள். ‘வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்’ என்று அவற்றை பகுத்து அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு - அதாவது 24 மணித்தியாலங்களோடு - அச்சொட்டாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாட் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.

பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

1. இளவேனில் - ( தை-மாசி மாதங்களுக்குரியது)

2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)

3. கார் - (வைகாசி – ஆனி மாதங்களுக்குரியது)

4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)

5. முன்பனி – (புரட்டாசி – ஐப்பசி மாதங்களுக்குரியது)

6. பின்பனி – (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)

காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விடயத்தை வாசகர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

இடையில் தமிழன் மட்டும் மாறி விட்டான்! ஆளவந்த ஆரியர்களின் அடிமையாக மாறியது மட்டுமல்லாது, இன்றும் கூட ஆரியர்களின் பண்டிகைகளான சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற பண்டிகைகளை, தன் இனத்துப் பண்டிகைகளாக எண்ணி மயங்கிப் போய்க் கிடக்கின்றான்.

இவை குறித்து பேராசியரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் கீழ் வருமாறு அன்று கூறியிருந்தார்.

“சித்திரை வருடப்பிறப்பு” என்பது சாலிவாகனன் என்ற வடநாட்டு அரசனால் பின்னாளில் நிலைநாட்டப்பட்டது. இந்த அரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத்தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலை நாட்ட முயலாதது பெரும் விந்தையாக உள்ளது….. …….. (சித்திரை வருடப் பிறப்பை) வரவேற்று, (அதன் மூலம் ) தமிழினத்தின் பழமையையும், பண்பையும், சிறப்பையும், செல்வாக்கையும் (இன்றைய தமிழர்கள்) சிதைத்து வந்துள்ளமை பெரும் வெட்கத்திற்கு இடமானதாகவும் இருக்கின்றது. தமிழ் மக்களிடையே நிகழ்ந்த மானக்கேடான, நகைப்புக்கிடமான செயல் இது ஒன்று மட்டும்தானா? - தமிழ் மக்களின் கோவில்களிலே இன்று தமிழ் மொழியும், தமிழ் இசையும் ஒதுக்கப்பட்டுள்ளன. . .

- என்று பேராசிரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

அப்படியென்றால் தமிழனின் புத்தாண்டு - உண்மையான - சரியான- வரலாற்று ரீதியான புத்தாண்டுத் தினம்தான் எது?

தமிழனுக்கு ‘வருடம்’ ‘பிறப்பதில்லை.’
‘புத்தாண்டு ஆரம்பமாகின்றது.’

அந்தத் தினம் தான் எது?

“தமிழனுக்கு தைத்திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு ஆகும்.”

கடல் நடுவுல மேங்கோ ட்ரீ (1401 2011)



Profe$sor:கடலுக்கு நடுவுல ஒரு மேங்கோ ட்ரீ இருக்கு அதிலிருந்து எப்படி மேங்கோவ பறிப்ப சொல்லு.
Student:பறவையா மாறி பறிப்பேன் சார் .
Pro:உன்ன பறவையா உங்க தாத்தனா மாத்துவான்..
Stu:கடலுக்கு நடுவுல மரத்த உங்க அப்பனா நட்டுவான்
prfsor shocks.stdnt rocks


Nose cut?
girl;நீ மட்டும் எனக்கு புருசனா வந்தா உன்னை விஷம் வச்சே கொண்ணுடுவேன்
boy:அய்யய்யோ நீ மட்டும் எனக்கு வைப்fபா வந்த விஷத்த நீ கொடுக்க முன்னாடியே நான் குடிச்சுடுவேன்.


Study tips?
university first வருவதற்கு ஒரு Idea காலைல 4 மணிக்கு அலாரம் வச்சு எந்திரிங்க ப்ரஷ் பண்ணிட்டு குளிரா இருந்தாலும் தயவு செஞ்சு குளிங்க, மணி 5 ஆயிடும். காபியோ டீயோ அம்மா கொடுப்பாங்க அப்புறம் என்ன 5.30 மணிக்கு புறப்பட்டு ஆறு மணிக்கு university போங்க நீங்கள்தான் இனி university first நாளைக்கு state first வருவது எப்படின்னு சொல்லுறேன்


ராத்திரி கொசு கடிச்சா good night வைக்கலாம் காலைல கொசு கடிச்சா Good morning வைக்க முடியுமா?-by கொசுவைவிட கொடூரமா கடிக்கும் கடி சங்கம்


இந்த செமெஸ்டர்ல நீ 80% மார்க் வாங்கணும் இல்ல சார் 99% மார்க் வாங்குவேன் என்ன காமெடி பண்ணுறியா. கொய்யால முதல்ல காமெடி பண்ணுனது யாரு..


ஜான் மில்டன் மனைவியுடன் வாழ்ந்தபோது எழுதிய நூல் தொலைந்த சொர்க்கம் (paradise lost )
மனைவியின் மறைவிற்கு பின் எழுதிய காவிய நூல் மீண்ட சொர்க்கம் (paradise regained ) கல்யாணம் அவ்வளவு பயங்கரமானதா?

Last but not least
immature love
"i love you Because i Need you"
mature love
"i Need you Because i Love you"-Gandhiji



டிஸ்கி:படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தம் கிடையாது.Thank you google images.

Sunday, January 9, 2011

காயமும் காதலே!!! (0901 2011)

Photobucket

பிரியங்களின் ஆளுமை
சிலநேரங்களில்..
காயப்படுத்துகிறது!

காயத்தின் காரணமும்…
காதல்தான்!

காதலை உருக்கி நீ
காயப்படுத்து!
காயத்தை உருக்கி நான்
காதல்படுத்துகின்றேன்.!

இறுதியாக கேட்டுச் செல்!!! (0901 2011)


வேண்டும் என்று
எமை விரட்டி வரும்
வேண்டாத வேதனைகள்!

ம்…!
பிரிவுகள் என்பது
உனக்குள்ளும் எனக்குள்ளும்
இறுதிவரை இல்லை
என்றுதானே இருவரும்
இறுமாப்புக் கொண்டிருந்தோம்…?

இதற்குள் எப்படி
இருவரையும் மீறி
இப்படி ஒரு பிரிவு…?

ஓ…!
என் மனதை
புரிந்து கொள்ளாமல்…

பூ மீது
ஆணி அடிக்கும்
வலியை தந்து
பிரிந்து செல்கிறேன் என்கிறாய்!

ம்… சரி
பிரியப் போகும் இவ்வேளையில்
ஒன்று சொல்கிறேன்
இதையும்
இறுதியாக கேட்டுச் செல்!

பிரிவு என்பது
எனக்கும் உனக்கும் மட்டும்தான்
நம் காதலுக்கு அல்ல

எனக்குள் நான் !!! (0901 2011)


என் நினைவுகள் தின்று செரித்து
என் உணர்வுகள் கொன்று குவித்து
என் சிந்தனையை சிதையாக்கி
தீ மூட்டும் உன் நினைவுகள் ….
என் கண்கள் சிந்தும் கண்ணீரை
என் பார்வை கக்கும் கனலே
பற்றி எரிக்கிறது …!
உன் உணர்வு தரும் வெம்மையால் .
கண்ணீரோடு காணாமல்போனது
என் கனவுகளும்தான் …!?
ஏந்திழையே !
என்னை கொன்றிருந்தாலும்
உன்னை மன்னித்திருப்பேன் .
என் உணர்வுகளை கொன்றிருக்கிறாய் …
என் செய்வேன்.!?

முன்பெல்லாம் …
விழி மூடும்போது
விதி வந்து சிரித்தது .
இப்போதெல்லாம் ….
நீ வந்து சிரிக்கிறாய் …!
சொல்லடி பெண்ணே ..!
நான் எதை நம்ப ???
உன்னையா …!
விதியையா …!!


மின்னலுக்கும் உனக்கும் ஒரு ஒற்றுமை ..!
ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில்
உயிர் குடித்துவிடுகிறீர்கள் ..!?

மின்னலுக்கும் உனக்கும் ஒரு வேற்றுமை ..
மின்னல் உயிர் குடிக்கிறது …
வலிப்பதில்லை ..!
நீ உயிரோடு மனதையும் கொல்கிறாய்.
வலிக்கிறது ..!
தறிகெட்டு ஓடும் என்
தவிப்புகளை
தவிடுபொடியாக்குகிறது
உன் காந்தவிழிப் பார்வை .
என் எண்ணங்களில்
தீ மூட்டி ,
என்னையே எரிக்கிறது
உன் மோனப்புன்னகை .
என் இதயம் பற்றி எரிந்தாலும்
கவலை படமாட்டேன் .
அது சுற்றி அல்லவா
வருகிறது …உன்னை ..!

உன் இமை மூடும்போதெல்லாம்
என் இதய தேசத்தில் மின்வெட்டு .


எனக்கு சொந்தம் என்று
சொல்லிக்கொண்ட
என்னுடையவைகளை ..
உனக்கு சொந்தமாக்கிகொண்டாய்.
உன்விழி பின்பற்றி என் இமை மூடுகிறது.

நீ
உறங்குகிறாய்.
நான் விழித்திருக்கிறேன்.
உன் இரவுகள் என் பகல்கள்.

உன் உள்சுவாசம்
என் உயிர் பற்றி இழுக்கிறது

உன் வெளி சுவாசம்
என் மனம் தொட்டு வருடுகிறது .
இந்த இழுபரியில்தான்
என் இதயம் துடிக்கிறதா பெண்ணே !?
உண்மை சொல் .!

நீ பசியில் வயிறு குழைகிறாய்.
நான் பரிதவித்து உயிர் குழைகிறேன்.
நீ உணவு உண்ணுகிறாய்.
நான் கை கழுவுகிறேன்.

என் ஒரு நாளை
உன் முழு நாளாக்கி கொள்கிறாய்.
ஒவ்வொரு நாளும் இப்படியே ...
சொல் !
நான் நானாவது எப்போது ?

என் வாழ்வு தேனாவது எப்போது ?

என்னைப்போல யாராவது இருந்தால் !!! (0901 2011)

என்னை நான் வெறுத்துத் தள்ளி நிற்கும் சமயத்தில் மனம் சோர்ந்து எதிலும் இல்லாமல் விரக்தி தோழமைக் கை கொடுக்க சாப்பாடு நித்திரை தவிர்த்து எதிலும் மனம் ஒட்டாமல் குந்திவிடுவேன்.ஆனால் ஏதோ ஒரு இசை மாத்திரம் என்னைத் தனிமையாக்காமல் சூழ்ந்து நிற்கும்.

ஆழ யோசித்தால் .... நான் ஏன் இப்படி.இன்பமும்,துன்பமும்,இழப்புக்களும் எனக்கு மட்டும்தானா.என்னைவிட இயலாதவர்கள்...இழப்பையே வாழ்வாக வாழும் எத்தனை பேர் உலகில்.

இந்த உலகில் நான் பிறந்துவிட்டேன்.நான்தான் இந்த வாழ்வை வாழ்ந்து முடிக்க வேண்டும்.என்னைப்போல யாரும் இல்லை.என் வாழ்க்கையை யாரும் வாழமுடியாது.விரும்பியோ விரும்பாமலோ பிறந்த வாழ்வை வாழ்ந்தே ஆகவேண்டியிருக்கிறது.

வாழ்வு தளம்புவதும்,உறவுகள் பிரிவதும்,இல்லாமையும்,வறுமையும் இவற்றால் வரும் கஸ்டங்களும் இயல்பானதே.ஏன் பெரும்பணம் படத்தவர்களுக்கும்,உயர் பதவியில் இருப்பவர்கள் மட்டுமென்ன சந்தோஷமாகவா வாழ்வார்கள்.நான் மட்டும்தான் வேதனையோடும் விரக்தியோடும் வாழ்கிறேன் என்பது கொஞ்சம் என் அறிவீனத்தைச் சொல்லாமல் சொல்கிறது.இவையில்லாவிட்டால் வாழ்வின் சுவையும் குறைந்துவிடுமோ என்பதாயும் இருக்கிறது.

எத்தனையோ இழப்புக்கள் வேதனைகள் பிரிவுகளைத் தாங்கியபோதும் சில பிரிவுகள் சில இழப்புக்கள் மனதோடு கலந்துகிடப்பவை.காயங்கள் மாறினாலும் அவை வடுக்களாக அப்பப்போ கைகளுக்கு தட்டுப்பட்ட்டு ஞாபகங்களை கிளறிப் புதைத்து,எரித்து,பின் அணையாத தனலாகத் தகித்துக்கொண்டிருப்பவை.

இப்போதெல்லாம் இன்னும்...இன்னும் வலிகளை வேதனைகளைத் தாங்கக்கூடிய பக்குவத்தையடைய முயல்கிறேன்.என்னால் உணரமுடிகிறது.என் தலை நிறைந்த பாரங்களாய் என் வேதனைகள்தான்.சந்தோஷமான நேரங்களில் உடம்பின் உற்சாகம் கூடிநிற்பதும் கவலையான சமயங்களின் உடம்பின் சக்தியே குறைந்து கூடாய்க்கிடப்பதையும் உணர்கிறேன்.கவலைகள் மறக்கவும் வெறுக்கவும் தொடங்குகிறேன்.தூரவே இருக்கும்படியாகக் கட்டளையிடுகிறேன்.

இன்னும்...இன்னும் வாசிப்பதையும் கேட்பதையும் அதிகமாக்குகிறேன்.
தேவையான தேடுதலில் கவனம் செலுத்துகிறேன்.ஒருவேளை நான் கூடுதலாகப் பேசுகிறேனோ என்கூட நினைக்கிறேன்.அர்த்தமற்ற ஆசைகளுக்குள் அழுந்திக்கிடக்கிறேனோ.எல்லா வேதனைகளுக்கும் காரணம் நானேதானோ.ஒரு வரையறையின்றி பறந்து திரியாமல் எனக்கென்ற சில கட்டுப்பாடுகள், கோடுகள் போட்டு அதற்குள் என் எண்ணங்களை ஆசைகளை அடுக்கி வைத்திருக்கிறேனோ.

விரிந்து பரவிக் கிடக்கும் உலகில் நான் தனித்தில்லை.எனதென்று எதையும் சொந்தம் கொண்டாடுவதில் அர்த்தமேயில்லை.உலகம் தாண்டிப் போனால் பிரபஞ்சம்.அதையும் கடந்து போனால்...சிந்தனைகள் குறைந்ததாலேயே தாமதங்கள் வாழ்வில்.என் எண்ணங்கள் செயலற்றுக் கிடந்ததுக்கு நானேதான் பொறுப்பு.சிரிப்பைத் தொலத்ததற்கும் நானேதான் பொறுப்பு.

அன்பைக்கூட அளவோடு பெற்றும்...கொடுத்தம் இருந்திருக்கவேண்டும்.
இன்று ஜீரணிக்க முடியாமல் அவதிப்படுவது நான்தானே.சாப்பிடும் சாப்பாட்டுக்கு அளவும் கலோரியும் நினைக்கும் நான்...ஏன் உணர்வுகளுக்கு மாத்திரம் அளவை அதிகப்படுத்தி வைத்திருக்கிறேன்.

என்றுமே நான் அடுத்தவர்கள் புகழவேண்டும் என்பதற்காக வாழ்ந்ததில்லை.ஆனால் என் மனதிற்கு பிடித்தமான மாதிரி வாழ ஆசைப்பட்டிருக்கிறேன்.அதேசமயம் என்னால் அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் வாழவும், மனதுக்கு ஒப்பாத,மனச்சாட்சி தவறியும் வாழ நினைத்ததில்லை.

வாழ்வு அற்புதமாய் அழகாய் இருக்கிறது இப்போதெல்லாம்.
எண்ணிக்கையோடு வாழ்வதைவிட எண்ணிக் கை நிறையக் கொடுத்து உதவி வாழ்வதில் எத்தனை சந்தோஷம்.உயிர் இருப்பதாய் இருந்ததற்கும்....உயிர் வாழ்வதற்கும் நிறையவே வித்தியாசம்.

மாற்றமுடியாத நேற்றைய வாழ்வை மறக்கிறேன்.இன்றைய வாழ்வை ரசிக்கிறேன் மதிக்கிறேன்.நாளைய பொழுதை பிரயோசனமாய் திருத்தி திருப்தியாய் வாழ்வேன்.என் வாழ்வை நானே வாழ்ந்துகொள்வேன்.வாழ்வின் வலிகளை வசப்படுத்திக்கொள்வேன்.
இனி எதற்காகவும் யாருக்காகவும் நான் காத்திருக்கபோவதில்லை.

நேற்று இறந்து விட்டேன் !!! (0901 2011)


சற்றே வியந்துதான் போகிறேன்
உன் மனதின் நிறம் மாறும்
குணத்தை எண்ணி....

அளவில்லா ப்ரியங்களுடன்
அணுஅணுவாய் என்னை காதலிக்க
முடிந்த உன்னால் எப்படி இன்னொரு
இதயத்தையும் காதலிக்க முடிந்தது?

நேற்று விளையாட்டாய் உன் கைப்பேசியை
எடுத்துப் பார்க்கையில்தான் என் மனம்
தற்கொலை செய்துகொண்டது.

எனக்கு மட்டுமே சொந்தமான
உன் Sent items' ல் யாரோ ஒருவருக்கு
நீ அனுப்பிய ஐலவ்யூக்களும், உம்மாக்களும்
என்னுள் ஏற்படுத்திய வலியை
உன்னால் உணரக்கூடுமா?

என் குரல் சேமித்து வைக்கப்பட்டிருந்த
உன் ரெக்கார்டிங்கில் இப்போது
இன்னொருவர் குரல்...
உன் தொலைபேசியில் இருந்த என்
அத்தனை புகைப்படங்களும் எங்கே போயிற்று?
உன்னால் பதில் சொல்ல முடிகிறதா?

என் முன்னாலே நீ உன் புதுக்காதலுடன்
சிரித்து பேசுகையில் நொடிக்கொருமுறை
உன் காதலின் நினைவுகளால்
கற்பழிக்கப்படுகிறேன்.
இறைவா என் எதிரிக்கும் வேண்டாம்
இப்படி ஒரு வேதனை.

எனக்கு நிச்சயமாய் தெரிகிறது
உன் ஸ்பரிசங்களும், உன் முத்தங்களும்
இனி இன்னொருவருக்கு தான் சொந்தம் என்று...
மூளைக்கு புரியும் இந்த உண்மையை
மனம் அடம்பிடித்து ஒப்புக்கொள்ள மறுக்கிறது.

உன் வாசம் படிந்த கைக்குட்டை..
உன்னுடன் கண்டு களித்த சினிமா டிக்கெட்..
ஓயாமல் சிரிக்கும் உன் புகைப்படம்..
காதலுடன் நீ வரைந்த கிரீட்டிங் கார்ட்
என உன்னை மட்டுமே நினைத்துக் கொண்டே
இருக்க வேண்டும் என நான் பத்திரப்படுத்திய
உன் நினைவுகள் அனைத்தும் வெறும்
நினைவுச் சின்னங்களாக மட்டுமே இருக்கும் என
சத்தியமாய் நினைக்கவில்லை...



என் வசந்த காலத்தின்
ஒரு பக்கத்தை முற்றிலும்
இலையுதிர் காலமாய் செய்தாய்.

மனம் வலிக்கும் நேரங்களில்
உன் நினைவுகள் மட்டுமே சுகமாய் இருக்கும்.
ஆனால் இன்றோ என் மனவலிக்கு
முழுமுதற் காரணமும் நீயாய்...

அழுவது அவமானச் சின்னம்
என்பது என் கொள்கை.
ஆனால் இன்றோ என் கண்ணீர்
சுரப்பிகள் கூட வற்றிவிட்டன.

தற்கொலை செய்துகொள்வது
கோழைத்தனத்தின் உச்சம் என நினைத்திருந்தேன்.
கண் முன்னே இப்படி ஒரு வலியை
உணர்கையில்தான் தோன்றுகிறது
தற்கொலை பாலைவனத்தில் நீரைப்போல்...

உன் மனதின் கொடூரத்தை தாங்க இயலாமல்
ஒரு நொடியில் மணிக்கட்டை
கூரிய பிளேடால் அறுத்துக் கொண்டேன்.
நீ கொடுத்த வலியைவிட அது ஒன்றும்
வேதனை நிறைந்ததாய் இருக்கவில்லை.

என் காதல் நரம்புகளை அறுத்துவிட்டு,
நீ வீணை வாசிக்கிறாய்.
என் சந்தோஷ சிறகுகளுக்கு தீ வைத்துவிட்டு,
நீ குளிர்காய்கிறாய்.

யாரை நோக்கியோ உன் பார்வைகள்.
குருடாய் போனது என் உலகம்.
யார் பெயரையோ உச்சரிக்க தயாராய் உன் இதழ்கள்,
ஊமையாகிப் போனது என் தேசம்.

என் SMS சேமித்து வைத்திருப்பாய்.
எதற்கு என்று கேட்டால்,
உன் நினைவுகள் வரும் போது
எடுத்து படித்து கொள்ள என்பாய்..
இப்போது உன் Outbox' ல் கூட என் SMS இல்லை.
ஏன் இப்போதெல்லாம் என் நியாபகம்
உனக்கு வருவதில்லையா?

நான் அனுப்பிய
சில காதல் மெசேஜ்களையும்,
படங்களையும் சேமித்து வைத்திருந்தாய்.
சில நொடிகள் சந்தோஷப்பட்டது என் மனம்.

பிறகுதான் தெரிந்து கொண்டேன்
யாரோ ஒருவருக்கு Forward செய்ய அதை
எல்லாம் நீ பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாய் என்று..
"மனம் மரணமடைந்தது" என்ற ஷெல்லியின்
வார்த்தையை அனுபவித்து உணர்ந்தேன் அன்று..

வாழ்ந்துகாட்டு! வாழ்ந்துகாட்டு
என்று என் உறவுகள் எனக்கு
ஆறுதல் சொல்கின்றனர்.
இனி நான் எத்தனை கோடிகள் சம்பாதித்தாலும்
நீ எனக்கு கொடுத்த அந்த காதலை
என்னால் சம்பாதிக்க முடியுமா?

என்னதான் நான் பென்ஸ் காரிலே வந்து
உன் முன்னால் இறங்கினாலும்
உன் துணையுடன் உன்னை பார்க்க நேர்கையில்
என்னால் சிரிக்க முடியுமா?

வேறு யாரை நான் கட்டி அணைத்தாலும்
அந்த அணைப்பில் உன் வெப்பத்தை
என்னால் மறந்துவிட முடியுமா?

எத்தனையோ அழகான கவிதைகளை
என்னை எழுத தூண்டியது நீதான்.
இன்று துயரங்களையும் சுமக்கும் பக்குவத்தை
எனக்கு தந்து இப்படியும் கவிதைகள் எழுதலாம்
என புதிய அனுபவத்தையும் எனக்கு கற்று தந்தாய்.
உனக்கு நன்றி.

என் பெயர் சொல்லி அழைக்க மறந்து,
யாரோ ஒருவர் பெயரை சொல்லி நீ அழைத்தாய்,
அந்த ஒரு நொடியில் லேசாய் உதடு கடித்து
ஒற்றை வார்த்தையில் "சாரி" என்று
சொல்லிவிட்டு போய் விட்டாய்.
நேற்றே நான் இறந்து விட்டேன்.

இப்படிக்கு உன்....! (0901 2011)


என் பிரிய ராட்சஸி,

உன்னை எப்பவும் நினைச்சிட்டு இருக்கிற நான் எழுதுவது கடிதமே தான்... பல கவிதைகள் நான் எழுதியும் இன்றுவரை 'நல்லா இருக்கு' என்ற ஒரு வார்த்தையுடன் உன் மறுமொழியை நிறுத்திக்கொண்டாய். உன்னை அதிகம் பேச வைக்கவே இந்த கடித முயற்சி...(கடிதத்திற்கு பதில் என்ற ஒன்று எழுதிதானே ஆகவேண்டும்)

"வசந்தத்தை அறிமுக படுத்தினாய் என்றே இதுவரை எண்ணினேன்.....
அந்த வசந்தமே நீ என்பதை உணராமல்...!!"

உன்னை மலர் என்று சொல்லி
நீ வாடுவதை நான் விரும்பவில்லை !
நதி என்று சொல்லி நீ வேறிடம்
செல்வதை நான் விரும்பவில்லை !
நிலவு என்று சொல்லி பலரும்
உன்னை ரசிப்பதை நான் விரும்பவில்லை !
வேறு எதுவாகவும் இல்லாமல்
நீ
எனதாக மட்டுமே....
என்
நிழலாக மட்டுமே இரு !!

என்னை தவிர வேறு யாரையும் நீ விரும்ப கூடாது என்பது என் சுயநலம் தான்....ஆனால் என்னை போல வேறு யாரும் உன்னை இந்த அளவிற்கு விரும்பமாட்டார்கள் என்பது என் நம்பிக்கை..... முதல் முறை உன்னை நான் சந்தித்த நொடி எதுவென்று இன்றுவரை எனக்கு புலப்படவில்லை...... உன் அனுமதி பெற்ற பின்பே என் தாயின் கருவறை வந்தேன் என்று சொல்லி சிரித்தாய் ஒருநாள்......மீண்டும் உன் அனுமதி பெற்ற பின்பே கல்லறை சென்று சேர வேண்டும், சொல்லி மகிழ்கிறேன் எனக்குள் இன்று......!

"வாழ்க்கை விநோதமானதுதான்....... உன்னை நான் படிக்கவேண்டும் .....என்று வைத்துவிட்டு, விருப்பம் இல்லாமல் வேறொரு பரீட்சையை எழுத வைக்கிறது....!!"

எனக்கு எல்லாம் தெரியும்
உன்னை பற்றி......
உனக்கு என்னை பிடிக்குமா
என்பதைத் தவிர....?!

உனக்கு என்னைப்பற்றி
ஒன்றும் தெரியாது....
உன்னை நான் விரும்புகிறேன்
என்பதைத் தவிர....!!

என்னவளே....நீ உறங்கும் நேரத்தில் உன் முகம் தேடி அலையும் என்னை என்று புரிந்து கொள்வாய்....? விடியும் நேரம் உறங்க சென்றும் கனவில் வந்து எழுப்புகிறாய்...! உன்னிடம் என்ன பேசலாம் என்று யோசித்தே பகலும் முடிந்து விடுகிறது.

விரைவில் நாம் பிரிந்து விடுவோம் என்று நேற்று கனவில் மரணம் வந்து சொல்லிவிட்டு செல்கிறது.....

சாவதை பற்றி
எனக்கு கவலை இல்லை
சாவு ஒரு முறை !
வாழ்வதை பற்றிதான்
எனக்கு அக்கறை
தினம் தினம்
வாழ்ந்தாகணும்
அதுவும் நீ இல்லாமல் !!

நீ வாழும் பூமிக்கு நான் வருவேன்.....அங்கே காற்றில் கலந்திருக்கும் உன் சுவாசத்தை நான் சுவாசித்து.......என்னை புதுப்பித்துக் கொள்ளவேண்டும்.....!

இப்படிக்கு
அழகான பதிலுக்குக்காய் காத்திருக்கும்
உன் பிரிய ...

Friday, January 7, 2011

பொசசிவ் என்ற போர்க்களம்..(0701 2011)

ஆணா இருந்தாலும் சரி, பெண்ணா இருந்தாலும் சரி.. பொதுவா இந்த குணம் இல்லாத யாரையும் பாக்க முடியாது. சின்ன சின்ன விசயத்துல கூட நம்முடைய பொசசிவ் குணம் நம்மளையும் அறியாம வெளிப்படும். உதாரணத்துக்கு சின்ன குழந்தைங்க தங்களோட விளையாட்டுப் பொருட்கள அடுத்த சிறுவர்கள் எடுத்தா கோவப்பட்டு புடுங்கிடுவாங்க. அதுல கூட பொசசிவ் இருக்கு. அது தப்புனு சொல்ல முடியாது. மனிதர்களுக்கே இருக்குற இயற்கையான குணம் தான். ஆனா வாழ்க்கைல நாம எந்த சூழ்நிலைல எப்படி அந்த குணத்த வெளிப்படுத்துறோம்குறதுல தான் இருக்கு பிரச்சனை.

நீ ஒரு பறவையை நேசிப்பது நிஜமெனில் அதை சுதந்திரமாய் பறக்க விடு.
அது உன்னை நேசிப்பது நிஜமெனில் உன்னிடமே திரும்பி வரும்னு ஒரு கவிதை உண்டு.

இதை யாரும் செய்யலாம். ஆனா அந்தப் பறவை திரும்ப வருமானு யோசிச்சு அது என்ன பண்ணுதுனு கண்காணிச்சுகிட்டே இருக்குறவங்களும் இருக்காங்க..

நாம் நேசிப்பவர்கள் தன்னிடம் பேச வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. தன்னிடம் மட்டுமே பேச வேண்டும் என்று நினைப்பது தான் பொசசிவின் ஆரம்பம். (எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா?? கஜினி சூர்யா சொன்ன டைலாக்க கொஞ்சம் மாத்தி சொல்லிருக்கேங்க..)

அதிகமான அன்போட வெளிப்பாடு தான் பொசசிவ்னு சிலர் சொல்லலாம். இது வார்த்தைக்கு வேணும்னா அழகா தோணலாம். ஆனா அடிப்படைல யோசிச்சோம்னா ஒரு வித தாழ்வு மனப்பான்மையும் பொறாமையும் நம்பிக்கையின்மையும் கலந்த வெளிப்பாடு தான்னு தோணுது.

நாம ரொம்ப நேசிக்கிறவங்க வேற ஒருத்தர் கூட பேசும்போதும் பழகும்போதும் அந்த மூன்றாவது நபர் மேல ஒருவித கோபம் உண்டாகும். அவங்கள விட நாம எந்த விதத்துலயும் குறையா இல்லயேனு நமக்கு நாமே கேள்வி கேட்டுக்குவோம். அவங்களப் பத்தி பேச்செடுத்தாலே எரிஞ்சு விழுவோம். இது காதலர்களுக்கிடைல அதிகமா நடக்கும்.

தன் காதலி ஒரு பையன்கிட்டயோ, அல்லது காதலன் ஒரு பொண்ணுகிட்டயோ சாதாரணமாப் பேசுறத கூட அவங்க விரும்புறதில்ல.

அத விட.. அவங்க செல்போன்ல வெய்ட்டிங் கால் வந்துச்சுனா போதும்.. யார் கூட பேசிகிட்டு இருந்த? எதுக்கு பேசினனு கேட்டுக் கேட்டுக் கொன்னெடுத்துடுவாங்க.

இது ஆரம்ப நாட்கள்ல சாதாரணமான வாக்குவாதமா ஆரம்பிச்சு நாளாக நாளாக சந்தேகமா மாறுது. நமக்குப் பிடிச்சவங்க நம்மளுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்னு நெனக்கிறது தப்பில்ல. அதே சமயத்துல நம்மளோட விருப்பங்கள அவங்கமேல திணிக்கிறது தான் தவறு. இது அடுத்தவங்களோட சுதந்திரத்த பறிக்கிற மாதிரியான செயல் தான்.

காதலிலும் நட்பிலும் இந்த பொசசிவ் குணத்தின் சதவிகிதம் அதிகமாவே இருக்கு. இதுல ஆண் பெண்ணுங்குற பாகுபாடெல்லாம் இருக்குறதில்ல. இங்க பரஸ்பர புரிதல்ங்குறதே இல்லாம போய்டுது.

தனக்குத் தானே ஒரு வட்டத்தைப் போட்டுகிட்டு அடுத்தவங்களையும் அந்தக் கோட்டுக்குள்ளயே இருக்கணும்னு கட்டாயப்படுத்துறாங்க. இது ஒரு நிலைக்கு மேல வெறுப்பைத்தான் உண்டாக்குது.

அந்த மாதிரி சூழ்நிலை ஏற்படும்போது தான் ஒருத்தருக்குப் பிடிக்காத விசயத்த அவங்களுக்குத் தெரியாம மறச்சு செய்யணும்குற கட்டாயம் உண்டாகும். அதாவது நமக்கு ரொம்பப் பிடிச்சவங்க, நமக்குப் பிடிக்காதவங்க கூட பேசுறது நமக்குப் பிடிக்கலைனு சொல்லும்போது, நமக்குப் பிடிச்சவங்க, பிடிக்காத அந்த நபர் கூட நமக்குத் தெரியாம பேசுற சூழ்நிலை உருவாகும்னு சொல்றேன். (தெளிவாப் புரிஞ்சிருக்குமே..).

இன்னும் சொல்லப் போனா இந்தப் பொசசிவ் குணத்தால எந்த சந்தோசமும் நிம்மதியும் வந்துடப்போவதில்ல. மாறாக சண்டையும் மன அழுத்தமும் பிரிவும் தான் வரும்.

ஆனாலும் இந்தப் பிரச்சனைக்கு (நிரந்தரமான அல்லது தற்காலிகமான) பிரிவு மட்டுமே இதுக்கு சரியான தீர்வாகாது. சரியான புரிதலும் பரஸ்பர நம்பிக்கையும் இருந்தாலே போதும். குறிப்பா ஈகோ பாக்காம தங்களோட கோபங்கள தள்ளிவச்சுட்டு ஒருத்தருக்கொருத்தர் மனசு விட்டு வெளிப்படையா பேசினாலே பிரச்சனை தீர்ந்துடும்.