இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Monday, March 28, 2011

உங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள் (2803 2011)


இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற- உலகின் அனைத்து மக்களாலும் உடனடியாக கையாளப்பட்ட - அதிவேக வளர்ச்சியுற்ற - அற்புத அறிவியல் கண்டுபிடிப்பான Cell Phone அல்லது Mobile Phone எனப்படும் 'கைபேசி' உபயோகிப்பவர்கள் எந்த அளவுக்கு அதன் Electromagnetic Radiation மூலம் உடல்நலன் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், அதிலிருந்து தப்பிக்கும் வழி முறைகளையும் சுருக்கமாக சொல்ல முயற்சிக்கும் ஒரு பதிவு இது.


ஒரு Caller தன் செல்ஃபோனில் ஒரு Receiver-ஐ அழைக்கும்போது அவரின் செல்ஃபோனிலிருந்து வெளியாகும் மின்காந்தப்புலன் (Electro Magnetic Field) அருகிலிருக்கும் மொபைல் (Base Station - 1) டவருக்கு செல்கிறது. அங்கிருந்து சிக்னல், Switching Center-க்கு செல்கிறது. இங்கே அழைப்பாளர் மற்றும் அழைக்கப்படுபவரின் விபரங்கள் சேமிக்கப்படுகின்றன. பின் அங்கிருந்து சிக்னல் அழைக்கப்படுபவரின் அருகே இருக்கும் செல்ஃபோன் (Base Station - 2) டவருக்கு செல்கிறது. இதிலிருந்து புறப்படும் மின்காந்தப்புலன் Receiver-ன் செல்ஃபோனில் உள்ள ஆன்டென்னா மூலம் உட்கிரகிக்கப்படும் போது செல்ஃபோனில் ரிங் டோன் கத்துகிறது. அழைக்கப்படுபவர் வந்த அழைப்பை 'ஓகே' செய்யும்போது இருவருக்கும் தொடர்பு ஏற்படுகிறது.

The impact of cell phone radiation on humans..! & How to overcome it carefully..!

பிரச்சினை இப்போதுதான் ஆரம்பிக்கிறது. இவ்வாறு பேசும்போது செல்ஃபோனின் ஆன்டென்னா விலிருந்து தொடர்ந்து வெளியாகிக் கொண்டு இருக்கும் மின்காந்த அலைகள் எல்லா பக்கமும் தெறிக்கின்றன. அதில் கிட்டத்தட்ட பாதி ஆளவு அலைக்கதிர்கள் பேசுபர்களின் தலைக்கு உள்ளும் ஊடுறுவுகின்றன..! இந்த செல்ஃபோனின் மின்காந்த அலைக்கதிர்வீச்சின் அளவு, ஒரு மைக்ரோ வேவ் ஓவனின் அலைக்கதிர்வீச்சுக்கு ஏறக்குறைய இணையானது..! ஆக, விஷயம் அவ்வளவு விபரீதமானது..!


ஒவ்வொரு மொபைலுக்கும் ஒரு Specific Absorption Rate (SAR) உண்டு. இது 1.6 W/G (watts per gram) எனும் அளவுக்கு குறைவாக இருந்தாக வேண்டும். இது International Standard அளவு. உங்கள் மொபைலில் இது எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அது உங்கள் உடலுக்கு நல்லது.




நம் செல்ஃபோனுக்கான இந்த SAR-ஐ பின்வரும் மூன்று வழிகளில் அறியலாம்.
  1. உங்கள் செல்ஃபோனின் கையேடு ( user's manual) மூலம்.
  2. செல்ஃபோன் தயாரிப்பாளர்களின் இந்த தளம் மூலமாக.
  3. செல்ஃபோனின் FCC ID Number-ஐ என்டர் செய்து இந்த தளம் மூலமாக.


நீண்ட நேரம் செல்ஃபோனை ' அணைத்த கையும் காதுமாய் ' கதை அடிக்கும் மனிதர்களின் தலைக்குள் ஊடுறுவும் இந்த மின்காந்த அலைக்கதிர்வீச்சு தலைக்குள் சூட்டை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. உதாரணமாய் 15 நிமிடம் அவ்வாறு பேசிய ஒரு 'மொபைல் பேச்சாளரின்' முந்தைய பிந்தைய நிலையை பின்வரும் படம் காட்டுகிறது.


நீண்ட நேரம் காதோடு மொபைல் வைத்து பேசுவோருக்கு... மயக்கம், தலைவலி, தூக்கமின்மை, ஞாபகமறதி, காது இறைச்சல், மூட்டுவலி இப்படி உடனடியாக சில தங்கடங்கள் வருமாம்.


தொடர்ந்து இதேபோல 'அணைத்த கையும் காதுமாய் ' செல்ஃபோன் மூலம் நீண்டநேரம் பேசினால்..? பெரியவர்கள் மண்டைஓடு கனமானது. குழந்தைகளின் மண்டைஓடு மெல்லியது. இதனால், பெரியவர்களை விட குழந்தைகள் இக்கதிர்வீச்சினால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது, 5-வயது குழந்தைக்கு 75% பாதிப்பும் 10-வயது குழந்தைக்கு 50%-ம், பெரியவர்களுக்கு 25% பாதிப்பும் ஏற்படுகிறதாம்.



ஆக, இதே போல தினம் தினம் பல நிமிடங்கள் அல்லது பல மணி நேரங்கள் என சூடாகும் மூளை செல்களில் உள்ள புரோட்டீன் சிதைய, கடைசியில் Brain Tumor-ல் அல்லது சில சமயம் Brain Cancer-ல் கொண்டு போய் விடுகிறதாம்..!

இப்படி ஒரு சாரார் மிக தீர்க்கமாக ஆதாரங்களுடன் பரிசோதித்து சொல்ல, 'அந்த அளவுக்கெல்லாம்... அப்படியெல்லாம்... ஒன்றும் ஆகாது' என்று இன்னொரு சாரார்... (செல்ஃபோன் நிறுவனங்கள் சார்பாக...?) சில மருத்துவர்கள் வாதாடினாலும், விலை கொடுத்து வாங்கும் இந்த வேண்டாத பெரிய ஆபத்து எதற்குமா நமக்கு..? சில வருடங்கள் கழித்து "ஆமாமாம்... அந்த சாரார் சொன்னதே சரி"-ன்னு அப்போது பல நோயாளிகளின் புகாரை கண்டு ஜகா வாங்கினால் அப்புறம் இவர்களை நம்பினோர் கதி..? அதோ கதி அல்லவா ..!

'மொபைல் அடிமைகள்' ஆகிவிட்ட நம்மால், இதை எல்லாம் கண்டு பயந்து மிகவும் அரிய அவசிய கண்டுபிடிப்பான... இந்த செல்ஃபோனை "இனி வேண்டாம்" என தூக்கி எறிந்து விட முடியுமா..? முடியவே முடியாது அல்லவா..?

எனில், இறைநாடினால், மாற்று வழிகளை கைக்கொண்டு மேற்படி பயங்கர விபரீதத்திலிருந்து தப்பிப்போம்..! அதுவே புத்திசாலித்தனம்..!

இதற்கு சரியான வழி, நீங்கள் செல்ஃபோன் வாங்கும்போது 'ear phone' என்று ஒரு அம்சம் பெட்டியுடன் சேர்த்து கொடுத்திருப்பார்களே..!? ம்ம்ம்... அதுதான்..! அதை தேடி எடுங்கள்..! ஒரு சில நிமிடங்களுக்கு மேலே பேசுவதாயின் கண்டிப்பாய் அதை இனி காதில் மாட்டிக் கொள்ளுங்கள்..! என்னது...? அதை காணவில்லையா...? சரி...வேறொன்று டூப்பிளிகேட்டாவது வாங்குங்கள் சகோ..! ஆரோக்கியம் முக்கியம் அல்லவா..?
அதுவரை என்ன செய்யலாம்...? அவசரத்துக்கு, இனி பேசும் போது செல்ஃபோனை காதுக்கும் வாய்க்கும் கிடைமட்டமாக பிடித்து, அதன்மூலம் ஆன்டேன்னாவிலிருந்து வெளியேறும் அலைக்கதிர்வீச்சு கூடுமானவரை தலைக்குள்ளே செல்லாதவாறு பிடித்து பேசுங்கள். அப்புறம் 'Speaker Phone' என்று ஒரு அம்சம் உள்ளதே..! அப்படி என்ன ராணுவ ரகசியம் பேசிவிடப்போகிறோம்..? அணைத்த கையும் காதுமாய் செல்ஃபோனில் பேசாமால் 'Speaker Phone' உபயோகித்தும் பேசலாமே..!

'டவர் சிக்னல் வீக்' என்று மொபைல் காட்டினால், அந்த இடங்களில் பேசுவதை தவிருங்கள். ஏனெனில், கஷ்டப்பட்டு சிக்னலை பிடிக்க அலைக்கதிர்வீச்சு அப்போது உச்சத்தில் இருக்கும். பாதிப்பும் நிறைய. உடனே... சிக்னல் முழுக்க கிடைக்கும் இடமாய் தேடிச்சென்று பேசுங்கள். கதிர்வீச்சு அளவை குறைத்துக்கொள்ளலாம்.

'பொதுவாக யாருடனேனும் நீண்ட நேரம் கடலை போட்டேயாக வேண்டும்' என்றால், இருக்கவே இருக்கே லேண்ட்லைன்..! அதை உபயோகியுங்கள்..! எந்த பயமும் இல்லை... முக்கியமாக பேட்டரி சார்ஜ் தீர்ந்து பல மணிநேரம் பேச முடியாமல் போய் விடுமோ என்ற கவலையே இல்லையே...! ஹி..ஹி... :))

இனி... மொபைல் சோதனைகளை எல்லாம் கடந்து அதன் மூலம் சாதனைகள் பல செய்வோம்... !

Saturday, March 26, 2011

கிராமத்தாய்ங்கதான் நாங்க...! (2603 2011)


















அட கூட்டம் கூட்டமா சுத்திகிட்டு இருந்த பயலுகப்பா நாங்க....! நீ என்ன நெனைச்சுகிட்டு இருக்க.. டவுனுக்கு வந்து டைய கட்டிகிட்டு டஸ்ஸு புஸ்ஸுனு இங்கிலீசு பேசுறோம்னு பாத்தியா ! அட இது எல்லாம் வேல வெட்டினு வந்ததுக்கு அப்புறமப்பா.. ...! ஊருக்கு பக்கட்டு வந்து பாரு....எப்டி இருக்கோம்னு....

காடு, கரை, வயலு, வாய்க்கா, சேறு, சகதி, வெயிலுன்னு ஒரு மார்க்கமா வாழ்ந்திருக்கோமப்பா....! பாட்டன் முப்பாட்டன்னு மீசைய முறுக்கிகிட்டு திரிஞ்ச பயலுக நாங்க...! அப்டிதானே இருதிருப்பாய்ங்க நெறய ஆளுக....! அட வாழ்க்கை மாத்திபுடிச்சப்பா அம்புட்டையும்....! இங்குட்டு பொழப்பு தலப்ப தேடி வந்தாலும் சாதி சனத்த விட்டுபுட்டு இருக்கமாட்டமப்பா நாங்க....! கோவிலு, திருவிழா, காதுகுத்து, கல்யாணம்னு ஒண்ணு மண்ணுமா சேராம இருக்க மாட்டமப்பா...!

வெள்ளன நாங்க எந்திருக்கிறதுக்கு முன்னாடி ஆடு மாடுகளும், கோழி, சாவல்களும் எழுப்பி விட்டுறுமப்பா எங்கள...! கோழிபெட்டிய எங்கப்பத்தா தொறந்து விட்டா கெக்கரிச்சுகிட்டு போகும்யா அம்புட்டும்ம்ம் நாந்தேன் எப்பவோ கூவிட்டேனேன்னு விடிஞ்சது எனக்குதானே முதல்ல தெரியும்னு திமிரா போகும் பாரு அந்த கருத்த சாவ...! வெள்ளன எந்திரிச்ச திமிறுல்ல நாளு முழுசும் திமிராவே தெரியும்ல...! எங்கய்யா சொல்லுவாரு வெள்ளன எந்திரிச்சா மனுசன் கூட திமிராத் திரியலாம்னு..!

மாடுகளுக்கு எல்லாம் வைக்ககொலைய வைக்கப்பொடப்புல இருந்து அள்ளிகிட்டு வரும்போது வந்துரும்யா சந்தோசம் என் காளைக் கண்டுகளுக்கு...! வைக்கலை போட்டு தின்னு முடிக்கவும் கழனித் தண்ணிக்கு போயி தண்ணி காட்டிகிட்டு இருக்கும் போதே.. காப்பித்தணிய ஊத்திகிட்டு வந்துரும் எங்கப்பத்தா.... ! இப்பதான்ப்பு ஒங்க அத்தைகாரி பாலு பீச்சிகிட்டு இருக்கா... அப்புறமா பாலுகாப்பித் தாரேன் இப்போ வெரசா இந்த வரக்காப்பிய போட்டாந்தேன்னு அது காப்பியா ஆத்துற சுகத்துலயே ஒடம்புக்குள்ள ஒரு சுறுசுறுப்பு வந்துரும்யா...

பத்து ரூவா கொடுத்து பகட்டா இங்க ஓட்டல்ல கொடுக்குற காப்பித் தண்ணியெல்லாம் அட...நாண்டுகிட்டு இல்ல செத்து போகும்.எங்கப்பத்தா கொடுக்குற வரக்காப்பிய கண்டுச்சுனா..! ரொம்ப வெவராமத்தான்யா கணக்கு வழக்கு பாக்க ஊருக்கு ஒரு கணக்கு பிள்ளை, ஊர நிர்வாகம் பண்ண தலையாரின்னு வச்சுப்புட்டு பரம்பரை பரம்பரையா திரிஞ்சுருக்கோம் நாங்க...! இங்கிலீசு டாக்டரு எல்லாம் இப்பத்தானே வந்தாக....அந்த காலத்து வாழ்க்கைக்கு வைத்தியமே தேவையில்லையப்பா...!

மனிசன் இங்கிலீசு மருந்து கண்டு பிடிச்சு அம்புட்டு பக்கியலும் அதை எடுத்துகுற இந்தக் காலத்தில எல்லாம் 50 வயசு 60 வயசுக்குள்ள போயி சேந்திராய்ங்க...! எம் பாட்டன் முப்பாட்டன் எல்லாம் ஜவாப்பா 100 வயசு வரைக்கும் இருந்திருக்காய்ங்கள்ள.. ! வேலை வெட்டினு ஓடிகிட்டே இருப்பாய்ங்கள்ள அதுல திண்ட சோறு செரிச்சு போயி எல்லாமே சத்தா போயி இரும்பு மாதிரி இருப்பாய்ங்கப்பா...

நல்லா சாப்பிடவும் செய்யும் எஞ்சனம்...! அதுல ஒரு விவகாரம் இருக்குப்பு இப்ப.....! நல்லா சாப்பிட நல்லா சமைச்சு போட்டாக ஆத்தாமாருக அந்த காலத்துல...! பொழுதேனிக்கு வயல்ல கடந்து கஷ்டப்பாடு பட்டு வரவ்வைங்களுக்கு குடுக்குற சாப்பாட்டுலயும் சத்து இருந்துச்சு, சாப்புடுற சாமான்லயும் சத்து இருந்துச்சு....

காலையில எங்கய்யா வெள்ளாம காட்டுக்கு போவுறதுக்கும் முன்னால கூழு குடிப்பாக....! கூழை கரச்சு லோட்டால அடிச்சு ஆத்தி ...வாளைபூ சர்வம் மாறி இருக்குற பெரிய செம்புல ரெண்டு செம்பு குடிக்கும் போதே இந்தக் கையில சின்ன வெங்காயம் சிரிச்சிகிட்டு இருக்கும், அதே நேரத்துல எங்கய்யா வவுறு நெறயிற சொகத்துல எங்கப்பத்தா மனசு நெறஞ்சு கிடக்கும் குளுமையில் கொட்டுன நெல்லு மாதிரி.

இரண்டு பொண்டாட்டி கட்டுறது எல்லாம் அப்பம் சகசமான ஒண்ணுதேன்....! சொத்து விட்டு போகக்கூடாதுன்னு அக்காளுந் தங்கச்சியுமே ஒருத்தனுக்கு கட்டி வச்ச கதையெல்லாம் சகசம். அதுண்டு இல்ல அறுத்து கட்டுறதும் அம்ம வம்முசா வழில சகசந்தேன்... ! பின்னே இளாந்தாரி புள்ளைக புருசன் இல்லாம தனியா வாழணுமுல்ல...! இது புருசங்காரன் செத்தா தாண்டு இல்லப்பு....! சரியில்லாத புருசனா இருந்தாலும் சத்தமில்லாம பஞ்சாயத்துல வச்சி தீத்து விட்டுருவகா....

அம்புட்டு சுளுவா ஒண்ணும் செஞ்சுற மாட்டாக..அதுலயும் பல மொற இருக்குல்ல....! படார்னு தீத்துவிட்டுப்புட்டு..வேட்டிய ஒதரிக்கிட்டு போய்ற மாட்டாய்ங்க...! பஞ்சாயத்து தலைவரே தீர்ப்பு சொல்லி முடிச்சாலும் தப்புன்னு தெரிஞ்சா விடாதுய்யா ஊரு சனம்...எதுத்து கேள்வி கேக்கும்ல...! இப்புடி ஊருசனம் மாத்தி எழுதி வச்ச பஞ்சாயத்துக கொள்ளை இருக்கு..


கிராமத்தாய்ங்க தீர்ப்புன்னு அம்புட்டு சுளுவு இல்லப்பு..! எம்புட்டு சனம் சேந்தி வந்தாலும் மொத்த சனமும் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு நிக்கிம். சூது வாது தெறியாத மக்க ஒரு சொம்பு தண்ணிய கேட்டியன்னா...இருந்து ரெண்டு நாளு சாப்பிட்டு போங்கப்புன்னு விசனம் இல்லாம சொல்லுவாய்ங்க....

பட்டணத்து வாழ்க்கையில என்னத்த கண்டுபுட்டோம்..காசும் பணமும் சேரச் சேர மனிசன் மிருகம் கனக்கா நாக்க தொங்க போட்டுபுட்டு ஓடிகிட்டு இருக்காய்ங்க....! என்னமோ நாம சூட்டு கோட்டு போட்டுகிட்டு இருக்கும்னு இங்கன இருக்குற பயலுகளுக்கு நம்ம பூர்வீகம் தெரியலப்பு சும்மா..சில நேரத்துல ஒரண்டை இழுக்குறாய்ங்க..! பாசக்கார பயலுகதேன்....அண்ணேனு கூப்பிட்டா தோல்ல தூக்கிட்டு போற பயபுள்ளைகதான் நாங்க...

அதுக்காண்டி கோழைப் பயலுக இல்லேப்பு...வீச்சருவாவையும் வேல் கம்பையும் தூக்கிகிட்டு சுத்தின பயலுக....எல்லாம் வேணாம்னு விட்டுப்புட்டு புள்ளைக்குட்டியள படிக்க வச்சிகிட்டு மீசைய ஒதுக்கி விட்டுப்புட்டு, கிருதவ சிறுசாக்கிகிட்டு.......ஹாய்.. ஹலோ ...ஹவ் ஆர் யூன்னு நாக்கு நுனில பேசிகிட்டு போய்கிட்டு இருக்கோம்..பொழைக்கிற பொழைப்புக்காண்டி...

மத்த படிக்கி உள்ளுக்குள்ள எங்கூரு கருப்பன் சத்தியமா....அட கருப்பன், வீரனாரு எல்லாம் யாருன்னு சொல்லிப்புடுறேன்...? அவுக எல்லாம் அந்த அந்த ஊருக்கு பிரச்சினைனு வந்தப்ப உசுர கொடுத்த புண்ணியவானுக...காலம் வேகமா ஓட ஓட..அல்லாரையும் சாமியாகிபுடிச்சு எஞ்சனம்..ஆனா.....அவுகள மனசுல நினைச்சுகிட்ட ஒரு வீரமும் தெம்பும் எங்கிட்டு இருந்துதேன் கெடைக்கிதோ....

சரி...ரொம்ப நேரமா பேசிகிட்டு இருக்கேன்..........ஒத்த வரில சொல்லிபுடுறேன்........! கிராமத்தான்னு சொல்லிக்கறதுக்கு ரொம்ப பெருமையா இருக்கு பங்காளி...!

அப்போ வர்ர்ர்ர்ட்டா!

Friday, March 25, 2011

"காத்திருக்கிறேன்..." (2503 2011)


கனவென்றால் கண் விழிக்க மறையும்
உணர்வென்றால் உறங்கும் போது மறையும்
நினைவென்றால் மறக்கும் போது மறையும்
உயிரென்றால் உடல் பிரிய மறையும்

காதலே நீ எப்போது மறைவாய் ...?

இருக்கும் வரை நீ இருக்கிறாய்
இறந்த பின்னும் இருக்கிறாய்
நீ மட்டும்...!

நீ அவள் வருகைக்கு முன் வந்தாய்
நீ வந்தபின் அவள் வந்தாள்
நீ இருக்கும்போதே அவள் இருந்தால்
நீ இருக்கிறாய்...! அவள் இல்லை..?

அவளிடம் சொல்..
அல்லது
அவளிடம் செல்.

இருவரும் இல்லாத வாழ்வு
நரகம் என்று...

என்ன நினைக்கிறாள் அவள்..?
என்னை தொலைத்து
தன்னையும் தொலைத்து
எதைத் தேடுகிறாள்..?

போகாத ஊருக்கு வழி எதற்கு..?
பொய்யாக ஒரு நடிப்பெதற்கு..?
செய்யாத சிலைக்கு விலை எதற்கு..?
பிறக்காத பிள்ளைக்கு பெயர் எதற்கு..?

இன்னும் இனிக்கிறது அவள் குரல்...
மனதில் ரீங்காரமாய்...
இன்னும் இருக்கிறது அவள் நினைவு
மனதில் பசுமையாய்...
இன்னும் வலிக்கிறது அவள் காதல்
உயிரில் உறைபனியாய்...

அவள் பாத்திரம் அறியாமல் நடிக்கிறாள்.
அவள் பாத்திரம் புரிந்ததால் துடிக்கிறேன்.
நடக்கும் நாடகத்தில்...
நான் நடிகனா..? இரசிகனா..?
நானறியேன்.

விடியும் வரை பொறுத்திருந்தால்
முடிவு தெரியுமென்றால்..?
காத்திருக்கலாம்...
இந்த நாடகம்
வாழ்க்கை...!?
முடியும் வரை...
காத்திருக்க சொல்கிறது.
..............................
..............................
..............................

காத்திருக்கிறேன்...

Thursday, March 24, 2011

ப்ரியமானவள்..! (2403 2011)

நீ எப்படி இருப்பாய் எந்த வடிவில் இருப்பாய் என்றெதுவும் எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு பிடித்தவிதமாய்த்தான் இருப்பாய் என்றொரு கிளி மனமரத்தினடியில் இருந்து ஆருடம் கூறிக்கொண்டிருக்கிறது . அந்தக்கிளியிடம் உன்னைப்பற்றி கேட்கும்பொழுதெல்லாம் அவளொரு பேரழகி என்ற பதில் மட்டுமே சொல்கிறது. எனக்கே தெரியாத உன்னைப்பற்றி இந்த மனமரக்கிளி இப்படி அடித்து கூறுவதன் ரகசியம் விளங்கவில்லை என்றபொழுதும் பேரழகிக்கு மணவாளனாய் ஆகப்போவதை நினைத்து மனது வானவில்வண்ண விளக்காய் பூரித்துதான் போகிறது.

ஒரு வேளை இந்தக்கிளி கூறுவதெல்லாம் பொய்யாய் போய்விடுமோ என்று அஞ்சி நடுநிசி இரவுகளில் உறக்கம் கலைந்து விடுகிறது. உறக்கத்துடன் ஒரு பிரசங்கம் நடத்தி வெற்றி பெற்று வந்த கனவின் ஆரம்பம் வெகு சுவாரஸ்யமாய் ஒரு புதிருடன் ஆரம்பித்தது. கனவின் புதிராய் நீ முக மூடியணிந்து என் மீது நீல நிற உடையுடுத்தி படர்ந்திருக்கிறாய், என் முதுகுப்புறம் சில வளர்பிறை நிலவுகள் புதிதாய் உதயமாகியிருக்கின்றன, முகத்தில் முழுநிலவுகள் இரண்டு உன்னிலிருந்து என்னில் இடம் மாறியிருக்கின்றன. இதையெல்லாம் மறுநாள் காலை என் வீட்டு அழகப்பன் என்னிடம் காட்டியபொழுது என் மீசைக்குள் வெட்கம் குடிகொண்டது. இவ்வளவு நடந்தும் எனக்கான உன் முகத்தை காணவே முடியவில்லை என்ற பொழுது மீசையிலிருந்த வெட்கத்தை துரத்தி துயரம் குடிகொண்டது, கனவும் கலைந்தது.

முன்தினம் வந்த கனவை பற்றியும் உன்னை பற்றியும் எப்பொழுதும்போல் வண்ணத்துப்பூச்சியிடம் பகிர்ந்துகொண்டபொழுது, கவலைப்படாதே உன் ஆசைக்குரியவளை நான் காட்டுகிறேன் என்னுடன் வா என்று என்னை ஒரு பூங்காவனத்திற்கு அழைத்துச்சென்றது. பூங்காவனத்தில் புதுமலர்கள் பூத்துகுலுங்கி கொண்டிருந்தன ஒரே ஒரு மலர் மட்டும் பூத்து சிரித்துக்கொண்டிருந்தது அது என்ன மலரென்று பார்ப்போமென்று அருகில் சென்றால் அது நீ, எப்பொழுதுபோலவே முகம் காட்டாமல் கண்ணாமூச்சியாட்டம் ஆடிக்கொண்டிருந்தாய் நீ. அருகிலிருந்த வண்ணத்துப்பூச்சியோ உன்னைக்காட்டி இவள்தான் உன் தேவதைப்பூ எடுத்துக்கொள் என்றது, முதல் முறை ஒரு மலர் எப்படி வெட்கப்படும் என்பதை நீ விளங்க வைத்துக்கொண்டிருந்தாய், சில நொடிகளில் மாயமாய் மறைந்தும் போனாய்.


இந்த முறை உன்னைப்பற்றிய ஏமாற்றம் விரக்தி இரண்டும் பன்மடங்கு பெருகியது . சதா சர்வ காலமும் உன்னைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்ததால் முகத்தில் ரோமங்கள் தன் உச்சகட்ட வளர்ச்சியை காட்டி என்னை நோயுற்றவனாய் காட்டிக்கொண்டிருந்தது. நோய் முற்றிய நிலையிலிருப்பவானாய் நினைத்து, என்னை பார்த்து பரிதாபப்பட்ட காதல் வைத்தியன் ஒருவன் வந்து என்னை கைத்தாங்கலாய் நீயிருக்கும் பூவனதேசத்திற்கு அழைத்துச்சென்றான். இம்முறை நீ உன் சக தோழியருடன் கால்பந்தாட்டம் விளையாடிக்கொண்டிருந்தாய் , லாவகமாய் பந்தை யாரிடமும் கொடுத்துவிடாமல் வலைக்குள் நீ அடித்த நேரம் சரியாய் என் உச்சி மண்டையில் நங்கென்று வலித்தது, வலைக்குள் விழுந்த பந்தை உற்றுப்பார்த்தபோது நீ விளையாடிக்கொண்டிருந்த கால்பந்து என் தலையாகவா இருக்க வேண்டும்?, நீ ஒருபக்கம் சிரித்துக்கொண்டிருக்கிறாய் உடன் வந்த காதல் வைத்தியன் ஒருபக்கம் சிரித்துக்கொண்டிருந்தான் பிறகுதான் தெரிந்தது அவன் உன்னால் நியமிக்கப்பட்ட காதல்தொண்டன் என்று.

உன்னை பார்க்கும் பொழுதெல்லாம் எதுவுமே பேசாமல் கிறுக்கு பிடித்து திரிவதை விட உன்னிடமே உன்னைப்பற்றி கேட்டுவிடலாமென்று தைரியமாக உன் அருகில் வந்து ஏய் கந்தர்வப்பெண்ணே யார் நீ என்றதும், சட்டென்று திரும்பி பார்த்த நீ மெல்லிய புன்னகையை பதிலாய் தந்துவிட்டு சிறிது தூரம் சென்றது ஒரு காகிதப்பந்தை என்னிடம் விசிறிவிட்டு சென்றாய். பித்து பிடித்த மனம் ஆவலாய் அதைப்பிரித்து படித்தது , அதில்

ப்ரியமானவனே..


உனக்கென்று பிறந்தவளே நான் உன்னை அடைவதற்கு முன் இந்த மலர் வனதேசத்திலிருக்கும் மலர்களின் தோழியாய் சிலகாலம் நியமிக்கப்பட்டிருக்கிறேன் இந்த மலர்களின் மனத்தையெல்லாம் வென்று அவற்றின் நறுமணத்தையும், அழகையும், பொறுமையையும், எனக்குள் உள்வாங்கி அழகும் வனப்பும் மிகுந்த பேரழகியாய் மாறியதும் உன்னிடம் வந்து உன் துன்பங்களை விலக்கி இன்பங்களை தருவேன் , அதுவரை இப்படி கிளியிடமும், வண்ணத்துப்பூச்சியிடமும் பேசிக்கொண்டு அரைப்பைத்தியமாய்த் திரியாமல், என்னை அடக்கி ஆளும் வலுக்களை உனக்குள் தயார்படுத்தி வை , உடம்பிற்குள் ஒராயிரம் தினவை புதைத்து வை நான் வந்து அவற்றிற்கு உயிர்கொடுக்கிறேன், உன் வீட்டிலிருக்கும் மலர்களிடம் சொல்லிவை அவைகளின் தோழி ஒருத்தி வரப்போகிறாளென்று, உன் வீட்டாரிடம் சொல்லிவை அவர்களின் மனத்தை ஆளப்போகும் இளவரசி வரப்போகிறாளென்று, அதுவரை சமர்த்தா இருக்கணும் இளவரசே....



ப்ரியமானவள்..

கவிதை : காதலில் .. ஜெயிக்க .. - (2403 2011)


காதலிக்க ..
அன்பும் பாசமும்
தேவை ..
ஆனால்..
காதலில் ..
ஜெயிக்க ..
காசும் பணமும் .
தேவை ..
அன்பே ..
வேண்டாம்
நான் ..
உன்னை காதலித்து
தோற்று ..
கொண்டே இருக்கிறேன்
என்னிடம் ..
அன்பும் பாசமும்
கொட்டி கிடக்கிறது

Saturday, March 19, 2011

விதியா? மதியா? (1903 2011)


ஒருவன் ஒரு ஞானியிடம் சென்று கேட்டான். "மனித வாழ்க்கையில் எல்லாவற்றையும் தீர்மானிப்பது அவன் விதியா, இல்லை அவன் மதியா?".

ஞானி சொன்னார். "ஒரு காலை உயர்த்தி மறு காலால் நில்"

கேள்வி கேட்டவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனாலும் இடது காலை உயர்த்தி வலது காலால் நின்றான்.

ஞானி சொன்னார். "சரி அந்த இன்னொரு காலையும் உயர்த்து"

அவனுக்குக் கோபம் வந்து விட்டது. நம் நடிகர் வடிவேலு மாதிரி "என்ன சின்ன பிள்ளைத்தனமாக இருக்கு" என்று சீறினான். "இரண்டு காலையும் உயர்த்தி எப்படி ஐயா நிற்பது?"

ஞானி அமைதியாகச் சொன்னார். "நான் காலைத் தூக்கச் சொன்ன போது எந்தக் காலைத் தூக்குவது என்று தீர்மானம் செய்தது உன் மதி. ஒரு முறை தீர்மானித்த பிறகு மறு காலையும் ஒருசேரத் தூக்கி நிற்க முடியாது என்பது விதி. பாதியை உன் மதி தீர்மானிக்கிறது. மீதியை உன் விதி தீர்மானிக்கிறது"

அந்த ஞானியின் வார்த்தைகளில் சூட்சுமமான இன்னொரு உண்மையும் இருக்கிறது. விதி என்பதே முன்பு நாம் மதி கொண்டு தீர்மானித்ததன் பின் விளைவாகவே பெரும்பாலான நேரங்களில் இருக்கின்றது.

விதியையும் மதியையும் விளக்க இன்னொரு உதாரணமும் மிகப் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

வாழ்க்கை ஒரு விதத்தில் சீட்டாட்டத்தைப் போல. குலுக்கிப் போடும் போது எந்தச் சீட்டுகள் வருகின்றன என்பது விதி. கையில் வந்த சீட்டுக்களை வைத்து எப்படி நீங்கள் ஆடுகின்றீர்கள் என்பது மதி. எந்தச் சீட்டு வர வேண்டும் என்பதை நம்மால் தீர்மானிக்க முடியாது. ஆனால் சீட்டுக்கள் கைக்கு வந்த பின் ஆடுவது நம் மதியிடம் உள்ளது. நல்ல சீட்டுக்கள் வந்தும் ஆட்டத்தைக் கோட்டை விடுபவர்கள் உண்டு. மோசமான சீட்டுக்கள் வந்தாலும் கவனமாகவும், புத்திசாலித்தனமாகவும் ஆடி வெற்றி பெறுபவர்களும் உண்டு.

சிந்திக்கையில் வாழ்க்கையை விதியும் மதியும் சேர்ந்தே தீர்மானிக்கிறது என்பதே உண்மையாகத் தோன்றுகிறது. ஆனால் மன உறுதியும், கடின உழைப்பும் மதியுடன் சேரும் போது அது விதியைத் தோற்கடித்து விடுகின்றது என்பதற்கு ஹெலன் கெல்லர் அருமையான உதாரணம்.

குருடு, செவிடு, ஊமை என்ற மிகப்பெரிய உடல் ஊனங்களை விதி ஹெலன் கெல்லருக்குக் கொடுத்தது. ஆனால் மன உறுதியாலும், கடின உழைப்பாலும் பேசும் சக்தியைப் பெற்றதோடு பிற்காலத்தில் சிறந்த பேச்சாளராகவும் புகழ் பெற்றார்.

விதி நமக்குத் தருவதை அப்படியே ஏற்றுக் கொண்டு முடங்கிக் கிடக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதையே மூலதனமாக எடுத்துக் கொண்டு மதியால் எத்தனையோ செய்ய முடியும். கால நேர சூழ்நிலைகளைக் கணக்கில் கொண்டு மதி கொண்டு உழைத்தால் அந்த விதியும் வளைந்து கொடுக்கும்.

எனவே விதி மிக சக்தி வாய்ந்ததாக இருக்கலாம். ஆனால் விதி மட்டுமே ஒருவனது வாழ்க்கையைத் தீர்மானித்து விடுவதில்லை என்பது மதி படைத்த மனிதர்களுக்கு நற்செய்தி.

Thursday, March 17, 2011

ஜெயித்தால் பாராட்டுங்கள்; தோற்றால் தட்டிக்கொடுங்கள்!(1703 2011)

விரல் சப்புவது என்பது குழந்தைகளின் தவிர்க்க முடியாத ஒரு செயலாக உள்ளது. அப்படி விரல் சப்பினால் குழந்தையின் பல் உயர்ந்துவிடும் என்று பயப்படும் பெற்றோர், அக்குழந்தையை அடிக்காத குறையாக கண்டிக்கும் நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள்.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 58.3 சதவீத பெற்றோர், தங்கள் குழந்தைகள் விரல் சப்பினால் கோபத்தில் சட்டென்று பிடித்து இழுத்துவிடுவதாக கூறினார்கள். அதே ஆய்வில், 18.8 சதவீத பெற்றோர், குழந்தையின் கை சப்பும் பழக்கத்தை தவிர்க்க, அக்குழந்தையின் கை விரல்களில் கசப்பு மருந்தை தடவி விட்டதை ஒப்புக் கொண்டுள்ளனர். 9.6 சதவீதம் பேர் விரல் சப்பும் தங்கள் குழந்தையை அடிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

மீதமுள்ள 13.3 சதவீதம் பேர்தான், விரல் சப்புவது குழந்தையின் வளர்ச்சியின் ஒரு கட்டம் என்பதை உணர்ந்துள்ளனர்.

ஒரு குழந்தையிடம் விரல் சப்பும் பழக்கம் ஆரம்பத்தில் இருந்தாலும், படிப்படியாக அதில் இருந்து அதை விடுபட வைத்துவிடலாம். அதுவரை பெற்றோர்தான் கம்பை தூக்காமல் இருக்க வேண்டும், குழந்தையை அடிக்க!
பொதுவாக 3 வயதுக்குமேல் ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சி அதிகமாக இருக்கும். 6 வயதுக்குமேல் அதன் குணம், செயல்பாடுகளில் புதுப்புது மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். அதனால், குழந்தையை சரியாக ஹேண்டில் செய்வது அவசியமாகிறது.

பெற்றோருக்கு பக்குவமான பத்து டிப்ஸ்:
* ஒரு குழந்தைக்கு முதன் முதலில் கிடைக்க வேண்டியது முழுமையான அன்பு. குழந்தை கேட்கும் பொருளை வாங்கி கொடுத்தால்தான் அன்பு என்று கிடையாது. குழந்தையை மடியில் அமர வைத்து நல்ல கதைகள் சொல்வது முழுமையான அன்பை அதற்கு கிடைக்கச் செய்யும். இப்படிப்பட்ட பெற்றோரிடம் குழந்தைகள் மிக நெருக்கமாகி விடும்.

* அடுத்ததாக குழந்தைக்கு நாம் கொடுக்க வேண்டியது நல்ல ஆரோக்கியம். குழந்தை பிறந்தது முதல் அதன் எடையை சரியாக 'மெய்ன்டெய்ன்' செய்து வரவேண்டும். 6 மாதத்திற்கு ஒருமுறை அதன் எடையை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும் என்பதற்காக அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிக அளவில் திணித்து குண்டு குழந்தைகளாக மாற்றிவிடக் கூடாது.

* மூன்று வயது முதல் நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். நகத்தை வெட்டுவது, தலையை சுத்தமாக பேணுவது, உள்ளாடைகள் மற்றும் உடல் அந்தரங்க உறுப்புகளை எப்படி ஆரோக்கியமாக பராமரிப்பது என்று அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். 18 வயது ஆகும்வரை ஒரே டாக்டரிடம் அழைத்துச் சென்று மருத்துவ ஆலோசனைகளை பெற வேண்டும்.

* அடுத்து முக்கியமானது பணம். பணம் இன்றி இன்றைய வாழ்க்கை முறையே இல்லை. அதனால், பணத்தின் மதிப்பை சின்ன வயதிலேயே குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். நம் குழந்தையுடன் படிக்கும் சக பெரிய இடத்து பிள்ளைகளிடம் பணம் அதிக அளவில் புழங்குகிறது என்பதற்காக நம் குழந்தைக்கும் பணத்தை அள்ளி செலவிடக்கூடாது. வீட்டின் சூழ்நிலையை பக்குவமாக புரிய வைத்து, தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. 'பாக்கெட் மணி' கொடுத்தால், அந்த பணத்திலும் சேமிக்கும் பழக்கத்தை குழந்தையிடம் உருவாக்க வேண்டும்.

* குழந்தையுடன் நேரத்தை செலவிடுவதும் முக்கியமானது. குழந்தை என்ன பேசுகிறது என்பதை பெற்றோர் பொறுமையாக அமர்ந்து கேட்க வேண்டும். ஸ்கூல் டீச்சர், பக்கத்து வீட்டுக்காரர்கள் பற்றி குழந்தைகள் சொல்வதையும் ஆர்வமாக கேட்க வேண்டும்.

* குழந்தையை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து வளர்க்கக்கூடாது. அவ்வப்போது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். தினமும் 'வாக்கிங்' அழைத்துச் செல்வதும் அவசியம்.

* குழந்தைகள் முதன் முதலாக தோல்வியை சந்திக்கும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும். தோல்வி என்பது வெற்றியின் அடிப்படை என்பதை பக்குவமாக புரிய வைக்க வேண்டும். இதற்காக, அம்மா, அப்பா இருவரும் ஏதாவது ஒரு விளையாட்டு விளையாடி யாரேனும் ஒருவர் தோற்பதுபோல் நடித்து, 'இதெல்லாம் சகஜம். தோல்வியை கண்டு துவளாமல் இருந்தால் அடுத்து வெற்றிதான்' என்பதை உணர்த்த வேண்டும். முக்கியமாக, எதையும் 'டேக் இட் ஈஸி'யாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை குழந்தையின் மனதில் பதிய வைக்க வேண்டும்.

* பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பக்குவத்தோடு குழந்தைகளை வளர்க்க வேண்டும். உன்னால் எதுவும் முடியும் என்று சொல்லி சொல்லி வளர்த்தால் குழந்தையிடம் தன்னம்பிக்கை தானாக வளர்ந்துவிடும். பிரச்சினை எப்படி வந்தது? ஏன் வந்தது? அதற்கு என்ன தீர்வு? இந்த மூன்று விஷயங்களையும் தைரியமாக அணுக குழந்தைக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

* குழந்தை மற்றவர்களிடம் பழகும்போது, அவர்கள் எப்படி தன்னிடம் பழகுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளும் பக்குவத்தை வளர்க்க வேண்டும். எதிர் பாலினர் தன்னிடம் பேசும்போது, அவர்களது பேச்சு, பார்வை, தொடுதல் போன்றவற்றை ஒரு குழந்தை புரிந்துகொள்ளும் பக்குவத்தை பெறுவதும் அவசியம். மற்றவர்கள் தவறாக நடக்க முயற்சி செய்கிறார்கள் என்பதை எப்படி கண்டறிவது என்பதை சொல்லிக்கொடுக்கவும் தவறிவிடக்கூடாது.

* கண்டிப்பு என்பதை குழந்தையிடம் முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். ஒரு பெற்றோர் தங்களது குழந்தையை அதிகம் கண்டித்தால், அவர்கள் குழந்தையிடம் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள் என்றுதான் அர்த்தம். ஒரு குழந்தை அதன் சக்திக்கு தகுந்தவாறுதான் சிந்திக்கும். அதனால், எந்த சூழ்நிலையிலும் குழந்தையை கட்டாயப்படுத்தக் கூடாது. மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடவும் கூடாது.

மொத்தத்தில், அறிவு, அன்பு, உணவு இந்த மூன்றையும் உங்கள் குழந்தைக்கு எப்பவும் கொடுக்க தயாராக இருங்கள். குழந்தை ஜெயித்தால் பாராட்டுங்கள். தோற்றால் தட்டிக்கொடுங்கள். உங்கள் குழந்தையும் நல்ல குழந்தைதான்!

Tuesday, March 15, 2011

குழந்தை பெற்றுகொள்ளவேண்டுமா? இதைப்படியுங்கள்!!. (1503 2011)



ஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது முதல் குழந்தை பெறும் வரை அதை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும். குழந்தை பெற்று கொள்வதற்கு சில அறிய ஆலோசனைகள்.

1) ஆரோக்கியமாக இருங்கள் :முதலில், கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தமது மகப்பேறு மருத்துவரைப் போய் பார்த்து, கர்ப்பம் தரிப்பதற்கு ஏற்றவகையில் தனது உடல்நிலை உள்ளதா என்று அறிந்துகொள்ள வேண்டும். நோய்த் தொற்று ஏதும் இருக்கிறதா, எடை, ரத்த அழுத்தம் சரியான அளவில் உள்ளதா என்று அறிந்துகொள்வது அவசியம்.

2) சரியான விதத்தில் சாப்பிடுங்கள்: மகப்பேறுக்குத் தயாராகும் பெண் நாக்குக்குச் சுவையான உணவுகளைக் கொஞ்சம் தள்ளிவைத்து, ஆரோக்கியம் காக்கும், சத்துகள் செறிந்த உணவுகளைச் சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும். பிரசவத்துக்கு முன்பும் பின்பும் நிறைய பழங்கள், பச்சைக் காய்கறிகள், முழுத் தானிய உணவுகள், புரதச் சத்து மிக்க உணவுகள் ஆகியவற்றைச் சாப்பிடுவது அவசியம். கால்சியம், இரும்பு சத்துகளும், வைட்டமின்களும் அத்தியாவசியமானவை.

3) உடல் பயிற்சி: அது உங்களின் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதுடன், கர்ப்பம் தரிப்பதால் ஏற்படும் மாற்றங்களில் இருந்தும் உடம்பைக் காக்கும். சுறுசுறுப்பான ஒரு நடை அல்லது சிறுபயிற்சி, மகிழ்ச்சி ஹார்மோன் எனப்படும் எண்டார்பினை வெளியிடச் செய்து உங்களின் மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

4) சரியான நேரம்: ஒரு சராசரிப் பெண் தனது வாழ்நாளில் 400 கருமுட்டைகளை வெளியிடுகிறார். ஒரு பெண் மகப்பேறுக்கு மிகவும் வாய்ப்பான நாட்களை அறியவேண்டும். பிசுபிசுப்பான திரவ சுரப்பைக் கொண்டும் ஒரு பெண் அதை அறியலாம். பெண்களின் உடல் கருமுட்டையை வெளியிடும் முன் உயிரணுவை வரவேற்கும் விதமாக அதற்கேற்ற சூழலை உருவாக்குகிறது. அவற்றில் ஒன்றுதான், உயிரணு பயணத்துக்கு ஏற்ற வகையிலான திரவ சுரப்பு. அது ஒட்டக்கூடியதாகவோ, பசை போலவோ, கிரீம் போலவோ இருக்கலாம். கர்ப்பம் தரிக்கும் திறன் உச்சத்தில் இருக்கும்போது அது முட்டைவெள்ளை நிறத்தில் இருக்கும்.

5) பாலியல் அறிவு அவசியம்: படுக்கையறை உறவு என்பது எந்த நிர்ப்பந்தங்கள் இல்லாததாகவும், ஓர் இன்ப விளையாட்டாகவும் இருக்க வேண்டும். உறவுக்குப் பின் உடனே எழுந்து விட வேண்டாம். உறவுக்குப் பின் சிறிதுநேரம் அப்படியே மல்லாந்து கிடப்பது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று பாலியல் நிபுணர்கள் கூறுகின்றனர். குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் அப்படிப் படுத்திருந்தால் போதும். உயிரணு கருமுட்டையைத் தேடி அடைய அது உதவும்.

6) உணர்வு ரீதியாகத் தயாராகுங்கள்: கர்ப்பம் தரிக்கும் பெண் உடல் ரீதியாக மட்டுமின்றி, உணர்வுரீதியாகவும் அதற்குத் தயாராக வேண்டும். தனது முழுக்கவனத்தையும் மகப்பேறில் செலுத்தியாக வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தையைப் பெற்று வளர்ப்பது என்பது கடினமும், பொறுப்பும் சேர்ந்த வேலை என்பதை உணர வேண்டும். குழந்தையைப் பெற்று வளர்ப்பதில் கணவரை விட மனைவிக்குப் பொறுப்புகளும் அதிகம். உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் அவர் சவால்களை எதிர்கொள்ள நேரும் என்பதைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும்.

Thursday, March 10, 2011

நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவியுங்களேன்.. (1003 2011)

என் நண்பர் அவருக்கு வந்த மெயிலை எனக்கு அனுப்பியள்ளார் இதில் பல பயனுள்ள தகவல்கள் உள்ளன. அதை உங்ககளிடம் நான் பகிர்ந்து அளிக்கிறேன்.

நாம் படித்து பயனடைவது மட்டும் அல்லாமல் நம்மால் முடிந்த அளவு இச்செய்தியினை மற்றவர்களோடும் பகிர்ந்து கொண்டால் மற்றவர்களும் பயன்பெற ஏதுவாயி இருக்குமென நம்புகின்றேன்.



1) தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.







2) பொறியியல் கல்வி படித்த மாணவர்கள் தங்களின் கல்வி விபரம் குறித்து http://www.campuscouncil.com/ என்ற தளத்தில் பதிந்து வைப்போமானால் குறிப்பிட்ட நாற்பது நிறுவனங்கள் நடத்தும் நேர்முகத் தேர்வில் எளிதாக கலந்து கொள்ள முடியும்.





3) மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற‌ 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.







4) தீ விபத்துக்களினாலோ அல்லது பிறக்கும் போதே வாய், காது , மூக்கு போன்ற உறுப்புக்களின் வளர்ச்சி குறைந்த நிலையில் இருந்தாலோ இலவசமாக ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள முடியும். வரும் மார்ச் மாதம் 23 ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 4ம் தேதி வரை ஜெர்மானிய மருத்துவர்கள் PASAM Hospital , Kodaikanal மருத்துவமனைக்கு வரவிருக்கின்றார்கள். மேலும் தகவல்களைப் பெற 045420 240668,245732 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.



5) வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.



6) அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே!



அதனால் நம்மால் முடிந்த வரை



**மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம்

**நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்

**ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம்.


7) இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை நட்டு அவற்றிற்கும் மரியாதை செய்வோமே!!


8) கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும். http://ruraleye.org/


9) பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471






10) இரத்தப் புற்று நோய்:

"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.


மேலும் விபரங்களுக்கு

வகை : புற்றுநோய்
முகவரி:
East Canal Bank Road, Gandhi Nagar,
Adyar Chennai - 600020
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241

11) விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் உணவை கீழே போட வேண்டாம். தயவு செய்து தயங்காமல் 1098 இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும்). இந்த எண் சிரமத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று அனைவரும் அறிந்ததே. பசியால் வாடும் குழந்தைகளுக்கு அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள்.

Wednesday, March 9, 2011

என்னவளே....?? (0903 2011)

















உன் நினைவுகள்
விழுங்கிக் கொள்கின்றன..
என் இரவு உறக்கங்களை...
எப்போதாவது கண்ணயரும்..
சில நிமிடங்களிலும்...
கனவுகளில் ஆக்கிரமிக்கும்..
உன்னை என்னடி செய்வது?

***

மழைபெய்யும் பின்னிரவு..
உறக்கம் கொடுக்க முடியா..
தோல்வியில் கிளைத்த..
வெட்கத்தில் என் படுக்கை....!
இறுமாப்புடன்...எக்காளமாய் சிரிக்கிறது...
அடாவடியாய் என்னை ஆக்கிரமித்திருக்கும்...
உன் நினைவுகள்!!!

***

எங்கிருந்தோ காற்றில்....
தவழ்ந்து வந்த புல்லாங்குழலின் இசை...
கூடவே கூட்டிச் சென்று விட்டது...
என் மனதையும்....!

***

பாலையின் மழையாய்
நீ இல்லாத பொழுதுகளில்
எனக்குள் காதலை...பெய்விக்கின்றன
உன் நினைவு மேகங்கள்....!

***














கண்களால் கேள்வி கேட்கிறாய்..
மெளனத்தால் பதில் சொல்கிறாய்
மெலிதான புன்னகை வீசி
என் உயிர் கவர்ந்து செல்கிறாய்
உன்னையே என்னை சுற்ற வைத்து
ஓரக்கண்ணால் பார்த்து
ஒய்யாரமாய் நடக்கிறாய்.....
கையெழுத்தே போடத்தெரியாதவன்
இப்போது கவிதை எழுதுகிறேன்...
மொத்தமாய் சொல்லடி....
என்னை என்ன செய்வதாய் உத்தேசம்?

Tuesday, March 8, 2011

நீ மட்டும்...(0803 2011)




காலை குளிர் நிலா பிரிந்திடலாம்
மாலை வெண்சூரியன் மறைந்திடலாம்
நம் ஆன்ம ஜீவன் கூட கரைந்திடலாம்
என் நிழலுக்கு துணையாய்
என்னோடு நீ மட்டும் என்றென்றும்....!


மெழுகுவர்த்தியாய் நானிருக்க...
தீக்குச்சியாய் தேடி வந்தாய்...!
உருகிக் கொண்டிருக்கிறேன்
உன் கரிசனத்தால்....!!
பாசம் காட்டி கொள்பவள் நீ மட்டும் தான்!!!


மாலை நேர பூவாய்
மலர்ந்தாய் என்
மனதில்...!
பிரிகிறேன் என்றவுடன்
மீண்டும் மலர்ந்தாய்
ஆழமாக...!!!!
வாடாமல் பூத்து
மலர்கிறாய்
மனதில்....
தினம்..தினம்...!!!


குட்டிகுட்டி சண்டையிடும்
ராட்சஷியும் நீயே!
நித்தம் கொஞ்சும்
குழந்தையும் நீயே!
அன்பை வாரிதருவதில்
அன்னையும் நீயே!
மொத்தத்தில் என் அகத்தில்....
உனக்கு நிகர் நீயே...!


தனிமை
என்னையும் காதலிக்கிறது??
நீ தனிமையை
நேசிப்பதால்...

சூரியனை சுற்றும்
கோள்கள் போலே
என்னை சுற்றும் உன் நினைவுகளுக்கும்
என்றும் குறைவு இல்லை என் தோழியே !!


கரம் நீட்டுகிறேன்
வா என்னோடு...
வாழ்க்கை இருக்கும்
வரை கைகோர்த்து நடக்கலாம்
நட்போடு !!!

குழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கணுமா ?(0803 2011)

குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுது. வெகு சகஜமாக அம்மாக்கள் சலித்துக் கொள்வது இது. குழந்தைகளுக்கு எதையாவது கற்றுக் கொடுப்பது ஒரு மாபெரும் கலை. சில அம்மாக்கள் அதில் வெகு கெட்டிக்காரர்கள். பல அம்மாக்களுக்கு அந்த சூட்சுமம் பிடிபடுவதில்லை. குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதைப் போல சுவாரஸ்யம் வேறு எதிலும் இல்லை. “அம்மா..” என குழந்தை மழலை வாயால் அழைக்கும் போது சிலிர்க்காத அம்மாக்கள் இருக்கவே முடியாது.

சில பிள்ளைகள் வெகு சீக்கிரம் பேசி விடுவார்கள். சிலர் ரொம்ப லேட்டா தான் பேசவே ஆரம்பிப்பார்கள். தாத்தா பாட்டி இருக்கும் வீடுகளில் பிள்ளைகள் சீக்கிரம் பேசுவார்கள். காரணம் பாட்டிகள் குழந்தைகளுக்கு எதையாச்சும் சொல்லித் தந்து கொண்டே இருப்பது தான். குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் கலையைப் பற்றி அமெரிக்காவின் என்.ஐ.எஃப்.எல் (National Institute for Literacy ) சுவாரஸ்யமான பல விஷயங்களை விளக்குகிறது.

ஒரு இடத்தில் உட்கார்ந்து படிப்பதெல்லாம் குழந்தைகள் விஷயத்தில் ஒத்து வராது. அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க நாமும் குழந்தைகளாக மாற வேண்டும். தாத்தா. பாட்டி, மாமா என உறவுகளில் ஆரம்பித்து, பார்க்கின்ற பொருட்களின் பெயர்களையெல்லாம் முதலில் சொல்லிக் கொடுக்க வேண்டும். குழந்தையின் கண்ணுக்குத் தட்டுப் படும் பொருட்கள் பற்றியெல்லாம் சொல்வது தான் கல்வியின் முதல் நிலை.

சில குழந்தைகள் தெளிவாகப் பேசுவார்கள். சிலருக்கு வார்த்தைகள் தெளிவாய் வராது. சிலருக்குத் தொடர்ச்சியாய் பேச வராது. எந்தக் குழந்தைக்கு என்ன தேவை என்பதை அறிந்து கொள்வது பெற்றோரின் சாமர்த்தியம். அதற்குத் தக்கபடி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க எக்கச் சக்கப் பொருட்கள் எல்லார் வீட்டிலும் உண்டு. டிவி முதல் மிதியடி வரை எல்லாம் சொல்லிக் கொடுங்க. அவர்களுக்கு நிறைய விஷயங்கள் மனதில் தங்கி விடும்..

வார்த்தைகள் பழக்கியாச்சா ? இப்போது குழந்தைகளே வீட்டுக்குள் உள்ள பொருட்களின் பெயரை சொல்லிச் சொல்லி சந்தோசப்படும். இப்போது அவர்களுக்கு கதைகள் சொல்லிக் கொடுங்கள். கதை பேசுவது கற்காலக் கலை. பலர் இதில் நடிகையர் திலகங்கள் தான். ஏற்ற இறக்கமாய், ஆக் ஷனுடன், தாள லயத்துடன் கதை சொல்வார்கள். கணவர்களே குழந்தைகளாய் மாறி ரசிப்பார்கள். குழந்தைகளுக்கோ சுவாரஸ்யம் தாங்காது. திரும்பத் திரும்ப கதைகளைக் கேட்பார்கள். குழந்தைக் கல்வியின் மிக முக்கியமான சங்கதி குழந்தைகளிடம் ஆர்வத்தைத் தூண்டுவது தான் !

கதையை சொல்லிக் கொடுத்தாச்சா. இப்போ அவர்களிடம் கதைகளைத் திரும்பச் சொல்லச் சொல்லுங்கள். அவர்கள் அப்படியே உங்களை இமிடேட் பண்ணுவார்கள். ரசியுங்கள். தடுமாறும் இடத்தில் சொல்லிக் கொடுங்கள். கதை சொல்லி முடித்து விட்டு எதையோ சாதித்ததாய் குழந்தைகள் கர்வத்துடன் பார்ப்பார்கள். அவர்களைப் பாராட்ட மறந்து விடாதீர்கள், அது ரொம்ப முக்கியம்.

குழந்தைகளை அடிக்கடி வெளியே அழைத்துச் செல்லுங்கள். அப்படிப் போகும்போது அவர்களுடைய மூளைக்கு சுவாரஸ்யமான வேலை கொடுங்கள். அதாவது தோட்டத்துக்குப் போகிறீர்கள் என்றால், இங்கே என்னென்ன பச்சை கலர் பொருட்கள் இருக்கிறது ? சதுர வடிவில் என்னென்ன இருக்கின்றன ? இப்படி கொஞ்சம் கேள்விகளைக் கேளுங்கள். இங்கே என்னென்ன பொருட்கள் “A” எனும் எழுத்தில் ஆரம்பிக்கின்றன என ஒரு புதிர் போடுங்கள். அவர்களுக்குத் தெரியவில்லையெனில் நீங்கள் துவங்கி வையுங்கள். எறும்பு என்றால் Ant – A யில் தான் ஆரம்பிக்கும் என எறும்பு தேடுங்கள்.

குழந்தைகள் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்து விட்டார்களா ? இப்போது அடுத்த நிலைக்குத் தாவி விடுங்கள். பள்ளியில் என்னென்ன நடந்தது என கேளுங்கள். அவர்கள் உற்சாகமாய் கதை பேசுவார்கள். நீங்களும் அதே உற்சாகத்தில் கேளுங்கள். இங்கே நீங்கள் வாக்கியங்களைக் கவனியுங்கள். குழந்தைகளுக்கு “இது தப்பு” என்று சொல்வதை விட சரியானதை நீங்கள் பேசிக் காட்ட வேண்டும். அது தான் சரியான வழிமுறை என்கிறார் ஷானன் எம் கேனன் (Shannon M. Cannon) எனும் எழுத்தாளர்.

பள்ளிக்குப் போக ஆரம்பிச்சாச்சு. இனிமேல் வீட்டுப் பாடம் தான் தலையாய கடமை என முடிவு கட்டி விடாதீர்கள். குழந்தைகள் வந்ததும் வராததுமாக வீட்டுப் பாடம் கொடுத்து மிரட்டாதீர்கள். அவர்களுக்கு அது வெறுப்பைத் தந்து விடக் கூடும். இன்னும் சொல்லப் போனால், நீங்கள் கூப்பிடும்போதெல்லாம் குழந்தை வந்து படிக்க வேண்டும் என நினைக்கவே கூடாது. குழந்தைகளுக்குப் படிக்க வேண்டும் என தோன்றும் போதெல்லாம் நீங்கள் தயாராய் இருக்க வேண்டும். அதனால் தான் கல்வியை அவர்கள் விரும்பும் வகையில் நீங்கள் தரவேண்டிய அவசியம் வருகிறது.

சில குழந்தைகள் சாப்பிடாமல் அடம் பிடிக்கும். உடனே அம்மா ஓடிப்போய் ஒரு புது பிளேட் எடுத்து வருவார். அதில் மிக்கியின் படம் போடப்பட்டிருக்கும். இதோ பாரு மிக்கி பிளேட், சாப்பிடலாமா என அழைத்தால் குழந்தை ஓடி வரும். அடுத்த நாள் “மம்மி மிக்கி பிளேட்ல சாப்பாடு கொடு” என குழந்தையே கேட்கும். கல்வியும் அப்படித் தான். அவர்களுக்குப் பிடித்த வகையில் சொல்லிக் கொடுத்தால் விரும்பிக் கற்பார்கள்.

இரண்டும் இரண்டும் நான்கு என்று சொல்லிக் கொடுப்பது ஒரு வகை. தோட்டத்தில் போய் நான்கு கற்கள் எடுத்து வா என்பது இன்னொரு வகை. முடிவு ஒன்று தான் வழிகள் தான் வேறு வேறு. பெற்றோர் கற்றுக் கொள்ள வேண்டியது குழந்தைகளின் ரசனையை !. டிவிடி பிளேயரில் சினிமா பாடல்களைக் கட் பண்ணிவிட்டு. ரைம்ஸ் போடுங்கள். ஆடியோ நூல்கள் வாங்கிப் போடுங்கள். புத்தகத்தைக் கொடுத்து படம் வரையச் சொல்லுங்கள். இவையெல்லாம் சில எளிய வழிகள் என்கிறார் கேரி டிரன்பெல் (Gary Direnfeld) எனும் குழந்தைகள் நல நிபுணர்.

ஒருவேளை குழந்தை ஏதாவது கிறுக்கிக் கொண்டு உங்களிடம் வரும். உங்களுக்குத் தலையும் புரியாது வாலும் புரியாது. “என்னடா வரஞ்சிருக்கே.. ஒண்ணுமே புரியலையே..” என்று சொன்னால் எல்லாமே அவுட். “அழகா இருக்கே. என்ன வரைஞ்சிருக்கே சொல்லு” என ஆரம்பிக்க வேண்டும். குழந்தை தனது படைப்பை விவரிப்பதன் வழியாகப் படத்தைப் புரிந்து கொள்ளவேண்டும் !

குழந்தைகளுக்கு ஈகோ உண்டு. அவர்களுடைய முயற்சிகளை கிண்டலடிக்கவே செய்யாதீர்கள். கிண்டல், கேலி, விமர்சனம் எல்லாம் குழந்தைகளுடைய சிந்தனையை மழுங்கடிக்கும். உதாரணமா, ஒரு படத்தில் எப்படி கலர் அடிக்க வேண்டும் என்பதைச் சொல்வது தான் உங்கள் வேலை. அப்புறம் தன்க்கு விருப்பமான கலரை அடிப்பது குழந்தையோட சாய்ஸ். அதுல போய் “மூக்குக்கு நீலக் கலர் அடிக்கிறியே சேச்சே… “ என்று நக்கலடிக்காதீர்கள். மம்மி… ஒரு எட்டுத் தலை பூனை வந்து, சைக்கிளைக் கடிச்சுக் கடிச்சு தின்னுச்சு” என குழந்தை கதை சொன்னால் ரசித்துக் கேளுங்கள். லாஜிக் எல்லாம் பார்க்காதீங்க.

இசையை ரசிக்காத குழந்தைகளே இருக்காது. அவர்களுக்கு நல்ல பாட்டுகள் மூலம் கல்வியைச் சொல்லிக் கொடுங்கள். ஒரு பாட்டு சொல்லிக் குடுங்க. அப்புறம் அந்த பாட்டிலுள்ள வார்த்தைகளையெல்லாம் மாற்றி வேறு வார்த்தைகள் போட்டு பாடுங்க. குழந்தைகளையும் அந்த உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அவர்கள் தங்களுக்குப் பிடித்த வார்த்தைகளைப் போட்டுப் பாட ஆரம்பிப்பார்கள்.

குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டியது ரொம்பவே அவசியம். அது கொஞ்சம் கஷ்டமான வேலை. காரணம் ஹால்ல சம்மணம் போட்டு அமர்ந்திருக்கும் டி.வி. ! அதனால வாசிப்பதற்கு குழந்தைகளுக்கு தனியா, அமைதியா, காற்றோட்டமா ஒரு அறை இருப்பது ரொம்பவே அவசியம்.

குழந்தைகள் வாசிக்கும் போது சிறு சிறு பகுதிகளாக வாசிக்கச் சொல்லுங்கள் அவர்கள் சுவாரஸ்யமாக வாசிப்பார்கள். ஏனோ தானோன்னு இருக்காம ரொம்பக் கவனமாய் கேளுங்கள். அவர்கள் தடுமாறும் இடங்களை திரும்பத் திரும்ப வாசிக்கச் சொல்லுங்கள். அதிகமாக வாசிக்கும் போது அவர்களுடைய உச்சரிப்பும் அழகாகும். பொருளும் தெளிவாகும். வாசித்த கதையிலிருந்து ஏதாச்சும் கேள்விகள் கேளுங்கள். கதையை மீண்டும் சொல்லச் சொல்லுங்கள். கதையின் வரிசை, கதாபாத்திரங்களின் வரிசையைச் சொல்லச் சொல்லுங்கள். இவையெல்லாம் குழந்தைகளின் அறிவை ஷார்ப்பாக்கும்.

இன்னொரு முக்கியமான விஷயம், கதை சொல்லும் போதே கதாபாத்திரங்கள் வழியாக குழந்தைகளுக்கு மனித மதிப்பீடுகளையும் சொல்லிக் கொடுப்பது. “அந்த குருவி தன்னோட குஞ்சுக்கு தீனி கொடுத்துச்சு. ஏன்னா குஞ்சுங்க மேல அம்மாக்கு ரொம்ப அன்பு. அன்புன்னா என்னான்னு தெரியுமா ?” என அன்பைப் பற்றிச் சொல்ல ஆரம்பியுங்கள். கல்வி வார்த்தைகளைப் படிப்பதல்ல, வாழ்க்கையைப் படிப்பது தான் என்கிறார் கரோலின் வார்னிமுன்டே (Carolyn Warnemuende ) எனும் குழந்தைகள் நல நிபுணர்.

குழந்தைகளுக்குப் பரிசு கொடுக்கறேன் பேர்வழின்னு குர்குரே, சிப்ஸ், சாக்லேட் என அடுக்கித் தள்ளாதீங்க. ரொம்பத் தப்பு. அதற்குப் பதிலாக குழந்தைகளுக்கு புத்தகங்கள் பரிசாகக் கொடுங்கள். டிராயிங், கலரிங், ஸ்டோரி என எதுவானாலும் பரவாயில்லை. குழந்தைகளின் கல்வி ஆர்வம் அதிகமாகும். குழந்தைகளின் விருப்பம் வீடியோ கேம்ஸ் என்று வைத்துக் கொள்ளுங்களேன். அவர்கள் காமிக் புத்தகத்தை விரும்பிப் படிப்பார்கள். ஸ்போர்ட்ஸ் ஆர்வம் அதிகமாய் இருந்தால் ஸ்போர்ட்ஸ் புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். அனிமல்ஸ் பிடிக்குமெனில் அப்படிப்பட்ட புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள்.

வீக் எண்ட் வந்தாச்சுன்னாலே தியேட்டருக்கு ஓடாதீங்க. அப்பப்போ லைப்ரரிக்குப் போங்க. பிள்ளைங்க லைப்ரரியில் நேரம் செலவிடட்டும். குழந்தைகளுக்கு வெரைட்டியாய் புத்தகங்களும் கிடைக்கும். அப்பார்ட்மெண்ட் வாசிகளென்றால் ரொம்ப வசதி. பக்கத்திலுள்ள பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து ஒரு புக் கிளப் ஆரம்பிக்கலாம். பெற்றோர்கள் அதற்கு வகை செய்தால், நட்பும் அறிவும் விரிவடையும்.

குழந்தைகளை மார்க் வாங்கும் மிஷினான பார்க்கவே பார்க்காதீர்கள். அது கல்வியின் மீது குழந்தைக்கு வெறுப்போ பயமோ வரக் காரணமாகி விடும். “குழந்தைகளை கட்டாயப்படுத்தி எதையும் கற்க வைக்காதீர்கள். அவர்கள் போக்கில் அவர்களைக் கற்க நீங்கள் வழிகாட்டுங்கள். அது தான் அவர்களுக்குள்ளே உள்ள அறிஞரை வெளிக்கொணரும்”. இதைச் சொன்னவர் வேறு யாருமல்ல, உலகையே வசப்படுத்திய பிளாட்டோ தான்.

கடைசியாய் ஒன்றே ஒன்று. கல்வி என்பது ஒரு சீசன் கிடையாது. அது எப்போதும் தொடரும் சமாச்சாரம். அதனால் முதலில் காட்டும் உற்சாகம் கடைசி வரை இருக்கட்டும்.

Saturday, March 5, 2011

என் செல்லச் சிறுக்கி..(0503 2011)



ன்ன கேட்டாலும் "தெரியாது" என்கிறாயே அப்போது உனக்கு என்ன தான் தெரியும் என்று கேட்கிறேன் கோவமாக.. பொறுமையாக நெற்றியில் ஊஞ்சலாடிய ஒற்றை முடியை காதில் சிறை வைத்து, புருவம் சுருக்கி, கண்கள் நெருடி, என்னருகில வந்து காதோரமாய்

எனக்கு
உன்னை தெரியும்,
உன் காதல் தெரியும்,
உன் குறும்புகள் தெரியும்,

உன் வரைமுறைகள் தெரியும்,

உன் அத்து மீறல்கள் தெரியும்,
உன் எச்சிலின் சுவை தெரியும்,
உன் நகக்கீறல்களின் ஆழம் தெரியும்,

உன் ஆளுமை தெரியும்,

உன்னை ஆளவும் தெரியும்,

உன்னை கொஞ்ச வைக்க தெரியும்,

உன்னை கெஞ்ச வைக்க தெரியும்,

உன்னை அழ வைக்கவும் தெரியும்,

என்னை உன்னிடம் இழக்கத் தெரியும்,

என்னிடம் உன்னை இழுக்கத் தெரியும்
,
எனக்கு எல்லாம் நீயென இருக்கவும் தெரியும்,


இவ்வளவு தெரிந்திருக்கிறேன் போதாதாடா "என் லூசு புருசா" என்று சொல்லி கன்னத்தையும் ஈரமாக்கி செல்கிறாள். என்னுதடுகள் கன்னத்திடம் சண்டையிட தயாராகின்றன.. எப்போது வந்தாலும் என்னுள் ஏதேனும் வன்முறையை தூண்டிவிட்டு தான் செல்கிறாள் என் செல்லச் சிறுக்கி..

எனை ஆளும் திமிரே ! (0503 2011)



ஒருவர் மேல் ஒருவருக்கு அன்பு இருப்பதால் தான் இந்த மானுடம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. அன்பிற்கு பல அர்த்தங்கள், அதில் ஒன்று காதல். மற்றவர்களுக்கு எப்படியோ எனக்குள் இருக்கும் காதல் தினம் புதிதாய் என்னை பூக்கவைத்து பார்த்து ரசித்து கொண்டாடுகிறது...!



சில சமயம்,
ஒரு கவிதையில்
அடைத்துவிட முடிவதில்லை
என் காதலை !
தவிரவும் எந்த ஒரு கவிதையும்
முழுமையாய்
சொன்னதும் இல்லை
என் காதலை !!


வெறும் மாம்சங்கள் மீதான காதல் அல்ல, இரு ஆன்மாவிற்கும் இடையேயான உறவு அல்லவா ?!

பிறர் நம்மை நேசிப்பதில் மட்டும் நேசம் இல்லை
நாமும் நேசிப்பதில் இருக்கிறது.....! அன்பை கொடுக்கவும், எடுக்கவும் எனக்கு இருக்கும் உரிமை பறிபோகாதவரை நான் நேசிப்பேன் என்பது ஒரு விதம், உரிமை இல்லாமல் போனாலும் நேசிப்பேன் இது என் நேசம்.....!

நேசிப்பதற்கும், நேசிக்கபடுவதிற்க்கும் பெரிய தேவைகள், எதிர்பார்ப்புகள் வேண்டியதில்லை, தூய்மையான அன்பு இருந்தால் போதும்.
எனக்கு பிடித்த இசையாய், பாடலாய் எனக்குள்ளே தாலாட்டி என்னை உறங்க வைக்கிறது என் காதல் ......ஒரு தாய் போல் தேற்றுகிறது.....சில நேரம் அழவும் வைக்கும், பின் பிறர் அறியா வண்ணம் வந்து கண்ணீரை துடைத்து விட்டும் செல்லும்...!?


வருடம் ஒன்று கூடினாலும் வயதை குறைக்கிறது என் காதல் !!

காதலில் தோல்வி
சாத்தியம் இல்லை
ஒரு முறை
பெற்ற வெற்றிக்கு
தெரியாது
தோல்விக்கு அர்த்தம் !


பறக்க தெரியும்
திசை தெரியாது
இலவம் பஞ்சாம்
என் காதல் !!


எனை ஆளும் திமிரே ! வசந்தத்தை அறிமுகம் செய்தாய் என்றே இருந்தேன் வசந்தமே நீ என்பதை உணராமல்...!

நேசம் என்ற பெயரில் எப்போது விழுந்தாய் என்னுள் !?
சரியாய் அந்நேரம் நான் பிறந்திருப்பேனோ !?

காதலுக்கு புது அர்த்தம் சொல்றோம்...நம் நேசம் காதலின் வரையறைக்குள் அடங்காது எனினும் இதன் எல்லைகளை நாமே வரையறுத்தோம் ....சராசரி காதலின் விதிகளுக்கு முரண் பட்டதாலேயே இது கண்ணிய காதலாக இருக்கிறது !


சராசரி காதலர்கள் அல்ல
காதலும் சராசரி அல்ல
எது சரி
கேள்வி எழவில்லை
எல்லாம் சரி என்கிறது என் காதல் !!


அடங்க மறு அத்து மீறு
என்கிறது கம்யூனிசம் !
அத்து மீறாமல் அடங்கி போ
என்கிறது என் நேசம் !!


தோற்க பிடிக்கிறது
உன்னிடம் மட்டும்
உன் வெற்றி ரசிக்க !


சரணடைய பிடிக்கிறது
சமாதானத்திற்கு அல்ல
மறுபடி
செல்லச்சண்டை போட !



விலகி இருக்க
எண்ணம் வந்த
மறுநொடி
அதிகமாய்
நெருங்குவேன் உன்னை !!



பல கவிதைகளில் நான் அள்ளி இறைத்த காதலை, மௌனமாய் உள் வாங்குவாய் ஒரு ஓரமாய் நின்று, தவறியும் உன் இதழ் உச்சரித்ததில்லை 'நேசிக்கிறேன் உன்னை' என்று !


நான் புரிந்து கொள்வேன், அழுத்தமாய் என் பெயர் சொல்லி அழைக்கும் போது அதை தான் நீ சொல்கிறாய் என்று !!


மீண்டும் சந்திப்போம்.....