இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Tuesday, June 14, 2011

மயக்கமா... கலக்கமா... மனதிலே குழப்பமா?(1406 2011)

மனக்குழப்பம் என்பது எல்லோருக்குமே இருக்கிறது. மனக் குழப்பதை தீர்க்க அனைவரும் மருந்து தேடுகிறார்கள். மருந்தாக எதை எதையோ பெறுகிறார்கள். சில தற்காலிக தீர்வை தரலாம். ஆனால் மனம் -பூரண நிம்மதியை, குழப்பத்தில் இருந்தான விடுதலையை பெற முடியாது. மறு நாள் விடியும் போது, மனக்குழப்பமும் பூபாளம் பாடும். சரி, இதற்கென்ன தீர்வு...

முதலில் மனக்குழப்பம் ஏன் ஏற்படுகிறது என்று பார்க்க வேண்டும். நல்லது, கெட்டது என்று எல்லாமே ஏதோ ஒரு இடத்திலிருந்து தான் உதயமாகிறது. சிக்கல் விழுந்த கயிற்றின் சிக்கலை எடுக்க வேண்டும் என்றால், அதன் நுனியை தேடி எடுக்க வேண்டும்.

ஒரு முறை ஒருவருக்கு காய்ச்சல் வந்துள்ளது. வழக்கமாய் தான் வைத்தியம் பார்க்கும் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். டாக்டர் மருந்து, மாத்திரைகள் தந்திருக்கிறார். இவரும் தொடர்ந்து உட்கொண்டிருக்கிறார். ஆனாலும் பாருங்கள். உடல் குணமடையவே இல்லை. டாக்டர் - அவரை பல பரிசோதனைகளுக்கு உட்படுத்தியும் கூட அவரது காய்ச்சலை குணப்படுத்த முடியவில்லை. காய்ச்சலுக்கான காரணத்தையும் கண்டு பிடிக்க இயலவில்லை. வேறு சில டாக்டர்களும் வந்து பார்க்கிறார்கள். ஒன்றும் புரியவில்லை.

அவரது வாழ்க்கையை கொஞ்சம் பின்னோக்கி சென்று பார்க்கிறார்கள். கடந்த சில மாதங்களாக, அவர் எங்கெல்லாம் சென்றார், அவரது நடவடிக்கை, என்ன மாதிரியான உணவை உட்கொண்டார் என்று ஆராய்கிறார்கள். சில வாரங்களுக்கு முன், அவர் சில வெளிநாட்டுகளுக்கு சென்றிருக்கிறார். வெளிநாட்டு சிதோஷ்ன நிலை மற்றும் அவரது சாப்பாடு என்று நிறைய விஷயங்கள் அலசப்படுகிறது. ஒவ்வாமை போன்ற எதுவும் வந்ததா என்று கேட்கிறார்கள். கடைசியில் கஷ்டப்பட்டு அவரது காய்ச்சலுக்கான காரணத்தை கண்டு பிடிக்கிறார்கள்.

அவர் வெளிநாடு சென்ற போது ஒரு விலங்கின் இறைச்சியை சாப்பிட்டிருக்கிறார். அந்த இறைச்சியை அரைவேக்காட்டில் எடுத்து விடுவார்களாம். அதன் காரணமாக அந்த வகை இறைச்சி சாப்பிடுபவர்களுக்கு லேசாக காய்ச்சல் வருவது இயற்கை தானாம். உடனடியாக அந்த நாட்டு மக்கள் மாத்திரை உட்கொண்டு விடுவார்கள். இவருக்கு அது தெரியாது. சில தினங்களில் சென்னைக்கு வந்து விட்டார். காய்ச்சலும் வந்துவிட்டது. காய்ச்சலுக்கான காரணங்கள் தெரியாமல் குழப்பங்கள்.

கடைசியில் அவருக்கான மருந்து மாத்திரைகள் அந்த நாட்டிலிருந்து தருவிக்கப்பட்டது. ஒரு வழியாக, படிப்படியாக குணமடைந்தார். குழப்பங்களும் இனிதே நிறைவுற்றது. யோசித்து பாருங்கள். என்றோ சாப்பிட்டது. அது ஒரு நோயாக படிப்படியாக வளர்ந்துள்ளது. இப்படி தான் ஒவ்வொரு பிரச்சனைகளும், குழப்பங்களும் தீர்வுகளுக்கான வழிகளை அடைத்து கொண்டு அல்லது அதன் ஆரம்பம் தெரியாமல் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.

மனித வாழ்வின் பிரச்சனைகளுக்கு, குழப்பங்களுக்கு இரண்டே காரணி. ஒன்று நம் அறியாமையால் "நமக்கு நாமே" என்பது போல - நம்மாலேயே ஏற்படுத்தி கொள்ள்ப்படுவது. அடுத்தது பிறரது செய்கையால் நாம் சந்திக்கும் பிரச்சனைகள்... அதனால் ஏற்படும் குழப்பங்கள்... பிறரால் நமக்கு நிகழும் சங்கடங்களுக்கு முன், நமக்கு நாமே ஏற்படுத்தி கொள்ளும் சங்கடங்களை பார்ப்போமா?

எதற்கெடுத்தாலும் குழப்பம் அடைகிறவரும், எதற்குமே குழப்பம் அடையாதவரும் அருகருகே தான் வசிக்கிறார்கள் என்பது ஆச்சர்யப்பட தக்க உண்மை. அவர்கள் கணவன் மனைவியராக வாழ்கிறார்கள்... நண்பர்களாக இருக்கிறார்கள்... அப்பா பிள்ளைகளாக கூட இருக்கிறார்கள். ஒருவரால் குழப்பமில்லாமல் வாழ முடிகிறது... மற்றவரால் ஏன் அவ்விதம் வாழ முடியவில்லை... பார்ப்போமா?

எந்த ஒரு விஷயத்திற்கும் - நாம் எந்தளவுக்கு முக்கியத்துவம் தருகிறோமோ, அந்த அளவுக்கு அது வீரியமானதாகவோ அல்லது வீரியமற்றதாகவோ ஆகிறது. அடிபடுகிறது. சின்னதாக பேண்டேஜை போட்டு கொண்டு தங்கள் வேலைகளை பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள். "அய்யோ எனக்கு அடிபட்டுடுச்சே" என்று அந்த காயம் ஆறுகிறவரை புலம்பி தவிக்கிறவர்கள் இருக்கிறார்கள்.

குழப்பத்தில் ஆழ்த்தக்கூடிய விஷயங்களும் இரண்டு வகையாக உள்ளன. உண்மையிலேயே அவை பிரச்சனையை தரக்கூடிய விஷயம் தானா அல்லது நமது அறியாமையால் - அதை பிரச்சனைக்குரியதாக கருதுகிறோமா என்று பார்த்தாலே குழப்பத்திற்கு சிறிய விடிவு கிடைக்கும். அடுத்து என்ன செய்வது. குழப்பத்திற்கான காரணிகளை தேடி கண்டு பிடியுங்கள்.

மனக் குழப்பத்தை ஏற்படுத்தும் பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்ளாமல் இருப்பது ஒரு வகை சாதுர்யம். ஆனால் முடியவில்லை. பிரச்சனைகளை உருவாக்கி கொண்டோம். நிச்சயம், தலையை காவு கேட்கும் சிக்கல்கள் வெகு குறைவே. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்று சொல்கிற அளவில் தான் பிரச்சனைகள் இருக்கும். அதனால் எதிர் கொள்ளலாம் - குழப்பமின்றி.

சில நேரங்களில் உங்களை ஆழ்த்தும் குழப்பங்களிடம் சவால் விடுங்கள். குழப்பங்கள் உங்களை ஜெயிக்கிறதா அல்லது நீங்கள் குழப்பத்தை ஜெயிக்கிறிர்களா என்று. போட்டி என்று வரும் போது மனம் இயல்பாகவே போராட துவங்கும். நீங்களும் அதிலிருந்து மீள்வீர்கள்.

No comments:

Post a Comment